Quantcast
Channel: அகத்தியப் பெருமானின் "சித்தன் அருள்"!
Viewing all 1936 articles
Browse latest View live

சித்தன் அருள் -244- "பெருமாளும் அடியேனும்" - 25 - இரண்டாவது மலைக்கு பெயர் சூட்டல்!

$
0
0

அந்த பத்து விருஷபாசுரர்களும் ஆகாயத்திற்கும், பூமிக்கும் தாவினார்கள். அவர்களது குறிக்கோள் அகஸ்திய மாமுனியை கண்டு பிடித்து, துவம்சம் செய்துவிடவேண்டும் என்பதுதான்.

சிவபெருமானால் தங்களை ஒன்றும் செய்துவிட முடியாது என்பதோடு, வேங்கடவனையே தங்கள் பக்கம் வரவழைத்து விட்டோம் என்ற மமதையும் அவர்களை ஆட்கொண்டதால் சிங்கத்தின் கர்ஜனை போல, அடிவயற்றிலிருந்து கத்தினார்கள்.

மலையைத் தூக்கி வீசி எறிந்தார்கள். மரங்களை ஆணிவேரோடு பிடுங்கி அடிக்க முற்பட்டார்கள். இன்னும் என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்ததால் அந்த இடமே ஒரு பெரும் போர்க்களமாயிற்று.

சிங்கங்கள் அங்கிருந்து பயந்து ஓடின. புலிகள், கரடிகள், ஓநாய்கள், காட்டெருமைகள் திசை தெரியாமல் அலறி அடித்துக் கொண்டு இங்குமங்கும் தடுமாறின.

இந்த மாதிரியான ஒரு கோரக் காட்சியை அகஸ்தியர் இதுவரையிலும் கண்டதில்லை. சிவபெருமானோ, இதை எல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

விருஷபாசுரர்கள் என்னதான் கொடூரத் தாண்டவம் ஆடினாலும், மலையைப் பெயர்த்தாலும் மரங்களைக் கொண்டு தாக்க முற்பட்டாலும், வேங்கடவன் தடுத்து நிறுத்தினார்.

இப்பொழுது அந்த பத்து விருஷபாசுரர்களின் கோபமும், அகஸ்தியரைப் பாதுகாக்கும் வேங்கடவன் மீது பாய்ந்ததால், வேங்கடவனுடன் போர் புரிய முற்பட்டனர்.

பலமுறை சீறிவிட்டு பின்பு பாம்பு தலையைத் தொங்கவிடுவது போல் பல நாட்கள் வேங்கடவனுடன் போர் புரிந்து அந்த விருஷபாசுரர்கள் களைத்துப் போவதை அறிந்து அவர்கள் மீது வேங்கடவன் கடைசியாக தன் சக்ராயுதத்தை ஏவினார்.

சக்ராயுதம் பாய்ந்ததும் அந்த பத்து விருஷபாசுரர்களும் மண்ணில் சாய்ந்தனர். அடுத்த சில நொடிகளில் மற்ற ஒன்பது விருஷபாசுரர்களும் மறைந்து போனார்கள்.

கடைசியில் ஒரே ஒரு விருஷபாசுரன் மட்டும் குற்றுயிரும், கொலையுதிருமாக விஷ்ணுவை நோக்கி வணங்கினான்.

"என்ன வேண்டும்?"என்றார் பெருமாள்.

"தங்களின் திருவடியைத் தினம் தாங்கிப் பிடித்துக் கொண்டே இருக்க வேண்டும்"என்றான் அசுரன்.

"மோட்சத்திற்கு போகவேண்டும் என்றால் இப்பொழுதே உன்னை அங்கு அனுப்பி வைக்கிறேன்".

"வேண்டாம் பிரபோ! தங்களின் இந்த தரிசனம்  என்றைக்கும் எனக்கு கிட்ட வேண்டும். அதற்கு......"

""சொல் விருஷபாசுரா!"என்றார் வேங்கடவர்.

"தங்கள் அவதாரத்தால் புகழ் பெற்றுக் கொண்டிருக்கும் வேங்கட மலையிலே தனியாக எனக்கு ஓரிடம் தரவேண்டும். தினமும் தங்களை நாடி வரும் பக்தர்கள் என் முதுகின் மீது ஏறி நடக்க வேண்டும். அந்த பாக்கியத்தை மட்டும் தாங்கள் எனக்கு அருள வேண்டும்"என்றான் அசுரன்.

"எல்லா விதத்திலும் நீ வித்யாசமாக இருக்கிறாய்! சிவனிடம் தவம் செய்து அசுர பலம் வேண்டினாய். எத்தனையோ காலமாய் பூலோகத்திற்கும், தேவலோகத்திற்கும், நிறைய தொந்தரவு கொடுத்தாய். கடைசியில் என் காலடியிலே "மோட்சம்"வேண்டுகிறாய். உன் வேண்டுகோள் புதிராக இருக்கிறது விருஷபாசுரா!"

"தேவரீரே! தாங்கள் பல அவதாரங்கள் எடுத்து என் போன்ற அரக்கர்களுக்கு மோட்சம் கொடுத்திருக்கிறீர்கள். அவர்கள் வரிசையில் நானும் இடம் பெற வேண்டுமென்று துடிகிறேன்."

"பக்தியினால் கூட உனக்கு மோட்சம் கிடைக்குமே. அதைவிட்டு ஏன் இந்த அக்கிரமம் செய்தாய்? கண்ணுக்கு கண்ணாய் விளங்கும் தவசீலராம் சிவமைந்தனான அகஸ்தியர் மீது பாய்ந்தாயே!"என்றார் வேங்கடவர்.

"இது கலிபுருஷன் கட்டளை வேங்கடவா!"என்றான் அசுரன்.

"எங்கிருக்கிறான் அவன்? அவனை அடக்கிவிட்டால் போதும்"என்று கொதித்தார் அகஸ்தியர்.

"பொறுங்கள்! அகஸ்தியரே! பொறுத்தருள்க! கலிபுருஷன் இப்பொழுதுதானே முளைத்திருக்கிறான்! இன்னும் என்னென்ன செய்யப் போகிறான் என்பதை யாமறிவோம். பாவம் பூலோக மக்கள்"என்று ஒரு வினாடி பேசிய திருமால். உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அந்த அரக்கனைக் கருணையோடு பார்த்தார்.

"கலிபுருஷன் கட்டளையால் தன்னை மறந்து ஆடிய உனக்கு இனி மோட்சத்தை யாம் தருவோம். அவ்வளவுதான்!"என்றார்.

"இல்லை வேங்கடவா! எனக்கு மோட்சத்தை விட, உங்களோடு அனுதினமும் போர் புரியும் பாக்கியத்தைத்தான் விரும்புகிறேன். எனக்கு தங்களது தரிசனத்தை தினமும் காண வேண்டும்"என்றான்.

"அப்படியென்றால்?"

"தாங்கள் குடிகொண்டிருக்கும் வேங்கடமலையில் அந்த ஏழு மலைகளில் ஒன்றுக்கு என் பெயரைச் சூட்ட வேண்டும். இது இந்த கலியுகம் முடியும் வரை, எல்லா பக்தர்களும் என் பெயரைச் சொல்லிவிட்டுத்தான் திருமாலை தரிசனம் காணவேண்டும்"என்றான்.

"அவ்வளவுதானே! விருஷபாசுரா! ஆதிசேஷனின் இரண்டாவது தலைக்கு இனிமேல் விருஷபாசுரன் என்று பெயர் விளங்கும். போதுமா?"என்றார் வேங்கடவர்.

"இதை விட என்ன பாக்கியம் வேண்டும் சுவாமி! தங்களைக் காணவரும் பக்தர்கள் அனைவருக்கும் என் முதுகில் இடம் கொடுத்து, எந்தவித ஆபத்தும் இல்லாமல், தங்களைத் தரிசனம் செய்ய அன்றாடம் உதவுவேன். இது போதும் எனக்கு"என்று கண்ணீர் மல்கி, திருமாலின் பொற்பாதங்களைத் தொட்டபடியே உயிர் துறந்தான், விருஷபாசுரன்.

வேங்கடவனின் கருணையைக் கண்டு வியந்து போனார் சிவபெருமான். அகஸ்தியரும் விஷ்ணுவை ஆனந்தமாக வணங்கினார்.

அப்போது..........

"என்ன முக்கண்ணரே! தபசுக்கு இரக்கம் காட்டி வரத்தைத் தந்துவிட்டு, என்னையும் இங்கு மாட்டிவிட்டீரே! இப்பொழுது தாங்கள் செய்யும் அழித்தல் தொழிலையும் நானல்லவா செய்ய வேண்டியிருக்கிறது? இனிமேல் விஷ்ணு அழித்தல் தொழிலையும் செய்வார் என்று யாரும் நினைக்காதபடி "வரம்"தாரும்"என்று கிண்டலாக வேண்டினார்.

"அதெப்படி முடியும்? கலிபுருஷன் இன்னும் என்னென்ன செய்யப் போகிறானோ! யாரறிவர்?"என்று நமட்டுச் சிரிப்போடு பதில் சொன்னார் சிவபெருமான்.

சித்தன் அருள்................ தொடரும்!

சித்தன் அருள் -244- "பெருமாளும் அடியேனும்" - 26 - கலிபுருஷனின் திட்டம்!

$
0
0

[வணக்கம் அகத்தியர் அடியவர்களே! இந்த வாரம் ஞாயிற்று கிழமை அன்று அகத்தியப் பெருமான் நமக்கு காட்டித் தந்த "அந்த நாள் இந்த வருடம்" (25/10/2015) - கோடகநல்லூரில் வருகிறது என்பதை மறுபடியும் உங்களுக்கு ஞாபகப்படுத்தி கொண்டு........... வாருங்கள் சித்தன் அருளுக்கு செல்வோம்.]  

வேங்கடநாதன் செய்கிற ஒவ்வொரு லீலைகளையும் கண்டு பயந்து போன கலிபுருஷன், அடுத்து என்ன செய்யலாம்? யாரை தூண்டிவிட்டு திருமலைத் தெய்வத்தை அங்கிருந்து விரட்டியடிக்கலாம் என்று திட்டமிட்டான்.

தான், திருமலைக்கு அருகில் இருப்பதால்தான் எந்த செயலையும் முழுமையாகச் செய்ய முடியவில்லை. வேங்கடவன் கண்ணில் படாமல் தொலைதூர மலையில் அமர்ந்து கொண்டு திட்டமிட்டால்தான் நினைத்ததை எல்லாம் நல்லபடியாக நிறைவேற்ற முடியும் என்று எண்ணினான் கலிபுருஷன்.

எனவே, திருமலைக்குத் தெற்கே மிகப்பெரிய அடர்ந்த ஒரு மலையைத் தேர்ந்தெடுத்தான். இறைவனிடம் பெற்ற வரம், இப்பூலோக மக்களைத் தன் வசப்படுத்த முடியாமல் போய் விடக்கூடாது என்று அந்த மலைக்குள் உள்ள அடர்ந்த காட்டில் அமர்ந்து யோசித்த கலிபுருஷன்;

வராஹமித்ரரை தூண்டிவிட்டு தோற்றுப் போனதையும், பக்தியின் மேலீட்டால் வேங்கடவனைத் துதித்துக் கொண்டிருந்த முனிபுங்கவரைத் துன்புறுத்திப் பார்த்து ஏமாந்து போனதையும், விருஷபாசுரர் விஷயத்தில் படுதோல்வி அடைந்ததையும் எண்ணிப்பார்த்தான்.

இந்த பூலோக ஜனங்களைக் குழப்பத்தில் ஆழ்த்த வேண்டும். தெய்வ பக்தியை ஒழிக்க வேண்டும். எந்த நன்மைகளும் யாரும் பெற்று விடக்கூடாமல் அதைத் தடுத்து நிறுத்திட வேண்டும். மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு மாய்த்துக் கொள்ள வேண்டும். தர்மம் அடியோடு அழிந்து அதர்மம் செழிக்க வேண்டும்.

குடும்பத்தைப் பிரிக்க வேண்டும். கற்பு நெறி வீழ்ந்து நாட்டில் கற்பழிப்பும், கொலைவெறியும் அதிகமாக வேண்டும். நீதி இறக்கவேண்டும். தடியெடுத்தவன் தண்டல்காரன் போல் நாட்டில் "தாதா"க்கள் அதிகமாகி, மக்கள் நிம்மதியின்றி அலையை வேண்டும்.

பெண்கள் இஷ்டப்படி சுதந்திரமாக நடக்க வைத்தால்தான் குற்றங்கள் பெருகும். இதற்கு வேண்டிய ஏற்பாடுகளை ஒவ்வொருவர் மனதிலும் தூண்டி நல்ல புத்தியை அடியோடு அழிக்க வேண்டும் - என்பதற்க்காகத்தானே கலிபுருஷனாக அவதாரம் எடுத்தோம்!

இதை வேங்கடவன், கல் வடிவில் அவதாரம் எடுத்துத் தடுக்கிறாரே என்ற கோபமும் வருத்தமும் தலைக்கேறின. பக்தி எங்கிருக்கிறதோ அங்கு தன்னால் எதுவும் செய்ய முடியாது என்பதை, கடந்தக் கால அனுபவத்தால் உணர்ந்த கலிபுருஷன் ஓர் அருமையான திட்டம் தீட்டினான்.

ஒரு மரத்தை பிடுங்கி எறிவது பெரிய காரியமல்ல. ஆனால் மரத்தின் நடுபாகத்தில் துளை போட்டோ அல்லது பூச்சிகளால் அரிக்க வைத்துவிட்டாலோ, அந்த மரம் தானாகச் சாய்ந்துவிடும். இந்த தத்துவத்தை காட்டு மரத்திலிருந்து, அந்த மரத்தை துளை போடும் வண்டுகளிடமிருந்து, கற்றான் கலிபுருஷன்.

இதை ஏன் நாம் செயல்படுத்தக் கூடாது? நேரிடையாக மோதுவது வீரம் என்று மோதிப் பார்த்து தோற்றுப் போனோம். இனி இந்த வழியில் நாம் செல்லக் கூடாது. ஒவ்வொரு குடும்பத்துக்குள்ளேயும் நுழைந்து, அவர்களுடன் பழகி, யார் யாருக்கு எங்கு பலவீனம் என்பதை முதலில் கண்டறிய வேண்டும்.

பிறகு, அந்த பலவீனத்தை வைத்து, அவர்களுக்குள் பகைமையைத் தூண்டி விடவேண்டும். அந்தக் குடும்பத்தைக் கெடுக்க வேண்டும். எந்த வித காரணத்தைக் கொண்டும் அவர்கள் இறைபக்தி நோக்கிச் செல்லாமல் தடுக்க வேண்டும். இப்படி செய்துவிட்டால், இந்த பூலோகத்தில் தன்னுடைய ஆட்சியை யாரும் கெடுக்க முடியாது என்று முடிவெடுத்தான்.

மரத்தின் நடுவில் துளைத்துத் துளைத்து பின்னர் மரத்தையே கீழே சாய்க்கும் காட்டு வண்டுகள் காட்டிய தத்துவம் கலிபுருஷனுக்கு மிகவும் பிடித்துப் போனது. அதை நினைவிற் கொண்டு, அதைச் செயல் படுத்தக் காத்திருந்தான்.

அப்போது.............

கலிபுருஷனின் கண்ணில் தென்பட்டார் "கருடாழ்வார்". தான் இருக்கும் இந்த அடர்ந்த காட்டு மலைப்பகுதியில் கூட்டம் கூட்டமாக, ஆனால் மிகவும் சுதந்திரமாகப் பறந்து வந்த கருடப் பறவைகளின் ஒற்றுமை கலிபுருஷனுக்கு எரிச்சலை தந்தது.

பெருமாளின் வாகனமான கருடாழ்வாரை முதலில் அவர் குடும்பத்தை விட்டுப் பிரிப்போம். இது வெற்றியாகிவிட்டால், பகவானின் பலம் குறையும் என்ற தீர்மானத்துக்கு வந்தான் கலிபுருஷன்.

சித்தன் அருள்............. தொடரும்!

சித்தன் அருள் -245- "பெருமாளும் அடியேனும்" - 27 - கருடாழ்வார் வீட்டில் கலிபுருஷனின் கலகம்!

$
0
0

அதை செயல் படுத்துவதற்காக, மெல்ல நகர்ந்து கருடாழ்வார் குடும்பத்துக்குள் கால் வைத்தான்.

"யாரது?"என்று கம்பீரமாக குரலை உயர்த்திக் கேட்டாள், கருடாழ்வாரின் மனைவி.

"ஓர் அதிதி"என்றான் கலிபுருஷன்.

"எங்கிருந்து வருகிறீர்கள்?" என்றாள்.

"எனக்கேதம்மா வீடு, வாசல், மனைவி, குழந்தைகள்? இப்படி கால் போன போக்கிலே வந்து கொண்டிருக்கிறேன்!'என்றான் கலிபுருஷன்.

"தோற்றமென்னவோ வயதானவர் போல் தெரிகிறது. ஆனால் பேச்சில் "வக்கிரம்"தெரிகிறது"என்றாள், கருடாழ்வார் மனைவி.

"அம்மணி! தங்கள் மனதை என் பேச்சு புண்படுத்தியிருந்தால், அருள் கூர்ந்து மன்னித்துக் கொள்ளுங்கள்!"என்றான் ​கலிபுருஷன்.

"மன்னிக்கும்படியான குற்றத்தை தாங்கள் எதுவும் செய்யவில்லையே! பேச்சில் ஞானிக்குரிய பக்குவம் இல்லை. அதிதிக்குறிய அடக்கம் இல்லை, என்று  என் உள்மனம் சொல்லிற்று. அதனால் தான் கேட்டேன். அது சரி, என்னைத் தேடி வந்ததற்கு ஏதேனும் காரணம் உண்டா?"என்று அலட்சியமாக கேட்டாள், கருடாழ்வாரின் மனைவி.

"தாங்கள், பகவான் பெருமாளின் மிக மிக நம்பிக்கைக்குப் பாத்திரமான கருடாழ்வாரின் மனைவி"

"ஆமாம்"

"பெருமாள் எல்லாரையும் காப்பாற்றுகிறார். தாங்கள் கணவரோ பெருமாளைக் காப்பாற்றுகிறார்"என்று மெதுவாக தூபம் போட்டான் கலிபுருஷன்.

"என்ன உளறுகிறீர்கள்?'என்றாள் கருடாழ்வார் மனைவி.

"அம்மணி! இப்போது நான் சொல்வது உளறுவது போல்தான் தோன்றும். போகப்போக, நீங்களே இதனை உணர்வீர்கள்!"என்றான் கலிபுருஷன்.

"பெரியவரே! நீங்கள் ஒரு அதிதி!"

"ஆமாம்"

"உங்களுக்கு, அன்னதானம், வஸ்திரதானம், பொருள்தானம் கொடுப்பதோடு, எங்கள் வேலை முடிந்துவிட்டது"என்றாள்.

"உண்மை"

"ஆனால் அதைத் தவிர மற்ற விஷயங்களில் நீங்கள் அதிகமாகத் தலையிடுகிறீர்கள்! என் கணவரைப் பற்றியும் எல்லோருக்கும் "படி"அளக்கும் பெருமாளைப் பற்றியும் நிந்தனை செய்கிறீர்கள். இது, அதிதிக்கு அழகல்லவே!"என்றாள் கருடாழ்வார் மனைவி.

"அம்மணி! என்னைப் படைத்த பிரம்மாவின் சாட்சியாகக் கூறுகிறேன். தாங்கள் எண்ணுகிற மாதிரி எவ்விதமான கெட்ட எண்ணத்தோடும் இங்கு வரவில்லை. ஆனால் தாங்கள் எல்லாம் தெரிந்தவர்! தெரிந்திருந்தும்!"என்று நிறுத்தினான் கலிபுருஷன்.

"என்ன சொல்கிறீர்கள்?" 

"ஓர் அதிதி வந்தால் அவரை மரியாதையோடு வரவழைத்து கால் அலம்ப ஜாலம் கொடுத்து, பசியாறுவதற்கு காய்கனி கொடுத்து அமரவைத்து உபசரிப்பதுதானே வழக்கம்?"என்றான் கலிபுருஷன்.

"இல்லையென்று யார் சொன்னது?"

"தாங்கள் தான், வாயால் சொல்லவில்லை, செய்கையால் காட்டிக் கொண்டிருக்கிறீர்களே!"என்றான் கலிபுருஷன்.

இதைக் கேட்டதும் கலகலவென்று சிரித்தாள், கருடாழ்வாரின் மனைவி.

கலிபுருஷனுக்கு இது அதிர்ச்சியைத் தந்தது.

"எதற்கு, இந்த சிரிப்பு அம்மணி?"என்றான்.

"எனக்கென்னவோ என் உள்மனதில் தாங்கள் "அதிதி"இல்லை என்று தோன்றிற்று. அதற்கேற்ப தாங்களும் நடந்து கொண்டீர்கள். அதனால்தான் நானும் தங்களுக்கு ஓர் அதிதிக்குரிய மரியாதையைத் தரவில்லை"என்றவள், "ம்ம்! இவ்வளவு தூரம் தாங்களே வாய்திறந்து கேட்கும் பொழுது தாங்களுக்குரிய மரியாதையைக் கொடுத்துத் தானே ஆகவேண்டும்? வாருங்கள், உள்ளே வந்து அமருங்கள்"என்றாள்.

"அப்பப்பா! தாங்கள் எவ்வளவு பெரிய புத்திசாலி! "தீர்க்கதரிசி"என்று வாயாரப் புகழ்ந்த கலிபுருஷன், கருடாழ்வாரின் வீட்டினுள் காலடி வைத்து உள்ளே நுழைந்தான்.

கலிபுருஷன் காலடியில் சனிபகவானின் உருவமும், நிழலும் மெல்லச் சேர்ந்து நுழைவதை கருடாழ்வாரின் மனைவி உணரவில்லை! ஆனால் அவளது மனதில் ஏதோ ஒரு கரிய உருவம் கம்பீரமாக தன் வீட்டிற்குள் நுழைவது போல் தோன்றியது.

பகவானையே சரணடைந்துவிட்டோம்! திருமலையில் குடியிருக்கும் வேங்கடவன் தனக்குப் பக்கபலமாக இருப்பதால் எதைக் கண்டும் அஞ்சிட வேண்டாம், என்று தைரியலக்ஷ்மி தனக்குச் சொல்வதாக எண்ணிக் கொண்டாள்.

கைகால் அலம்பிக் கொண்டு ஓர் அதிதி போல் கலிபுருஷன் கருடாழ்வார் வீட்டில் உணவருந்தினார். மரியாதை நிமித்தம், அவர் சாப்பிட்டு முடித்ததும், கலிபுருஷனின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றாள் கருடாழ்வாரின் மனைவி.

அவளை ஆசிர்வதித்துவிட்டு கலிபுருஷன் சொன்னான்.

"அம்மணி! சர்வ மங்களமும் உங்களுக்கு உண்டாகட்டும். ஆனாலும் என் மனதில் பட்டதை தங்களிடம் சொல்லாமல் போனால், தங்களுக்கு துரோகம் செய்தது போல் தோன்றுகிறது. தாங்கள் அனுமதி அளித்தால் சொல்கிறேன்"என்றான் கலிபுருஷன்.

"தாங்கள் வயதானவர். அதிதி! பார்ப்பதற்கு தந்தையைப் போன்றவர். தாங்கள் கூறுவது கெடுதலாகவா இருக்கப் போகிறது? தைரியமாக என்னிடம் சொல்லலாம்"என்றாள் கருடாழ்வாரின் மனைவி.

"தங்கள் கணவர் கருடாழ்வாரைக் காணவில்லையே!"என்றான் கலிபுருஷன்.

"ஏன்? அவர் வந்தால்தான் தாங்கள் சொல்ல வந்ததைச் சொல்வீர்களா?"என்றாள் கருடாழ்வாரின் மனைவி.

"இல்லை! இல்லை!. தங்களிடம்தான் சொல்லவேண்டும்! தங்கள் கணவர் இப்பொழுது எங்கிருக்கிறார் தெரியுமா? இந்திரலோகத்து அந்தப்புரத்தில் தன்னந்தனியாக இருக்கும் யுவராணியோடு கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்கிறார்! இது தங்களுக்கு எப்படித் தெரியும்?"என்று விஷத்தை விதைத்தான் கலிபுருஷன்.

கருடாழ்வாரின் மனைவி இதைக் கேட்டு, அதிர்ச்சியில் வீழ்ந்தாள்!

சித்தன் அருள்............. தொடரும்!

சித்தன் அருள் - 246 - அந்தநாள் இந்த வருடம் (25/10/2015) - கோடகநல்லூர் - அகத்தியப் பெருமான் நடத்திய பெருமாளின் திருவிழா!

$
0
0

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அந்த நாள் இந்த வருடம் - 25/10/2015 - கோடகநல்லூர் - என்கிற தலைப்பில், பச்சை வண்ணப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயார் அவர்களுக்கு, திருமஞ்சன (அபிஷேக) ஆராதனைகள் அன்றைய தினம் நடக்க இருந்ததை முன்னரே "சித்தன் அருள்"வலைப்பூவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்தநாளின் மகத்துவம் உங்கள் அனைவருக்கும் தெரியும் என்பதால், பின்புலத்தில் அகத்தியப் பெருமான் நின்று, தத்ரூபமாக நிகழ்ச்சிகளை நடத்தி தந்ததை, அனைவருக்கும் அருளியதை இந்த தொகுப்பில் உங்கள் முன் மிகுந்த பணிவன்புடன் சமர்ப்பிக்கலாம் என்ற எண்ணத்தில் இந்த தொகுப்பை வழங்குகிறேன்.

அந்த நாளுக்கு முன்:-

அந்தநாளில் மிக எளிதாக நடத்த வேண்டிய விஷயங்களை, ஒதிமலை முருகப்பெருமானின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்குப் பின் செப்டம்பர் மாதத்தில் யோசித்த பொழுது, ஒரு விஷயம் தெளிவாகியது.

"என்னால் ஆவது எதுவும் இல்லை; ஆசைப்படத்தான் முடியும்; நடத்தப் போவது அகஸ்தியர் செயல்"என்று.

அது உண்மை என்று பின்னர் விளங்கியது. அதையும் விளக்கியது அகத்தியப் பெருமானே.

நண்பர் திரு கார்த்திகேயன் அடிக்கடி கூறுவார். அப்படி கூறிய விஷயங்களை தொகுத்தால் ............

"அகத்தியப் பெருமான் மிக மிகப் பெரிய விஷயங்களை, சிறு சிறு கூறாக்கி, பலரை தேர்ந்தெடுத்து, ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு பொறுப்பை ஒப்படைத்து, அதன் முடிவுகளை ஒன்று சேர்ந்தது, அவர் நினைத்த மிகப் பெரிய விஷயத்தை (ப்ராஜெக்ட்), நிறைவேற்றிக் கொள்கிறார். அது லோக ஷேமத்துக்காக. அதில் ஒரு சிறு துளி வேலையை நம்மிடம் ஒப்படைக்கிறார் என்றால், நாம் அனைவரும் மிகப் புண்ணியம் செய்தவர்கள். அதில் மிகுந்த திருப்தி வந்துவிடவேண்டும், அது தானாக வந்துவிடும். பிறருக்கும் அந்த சேவையில், அவர்கள் விரும்பினால் பங்கு கொடுக்க மறந்துவிடக் கூடாது. உதாரணமாக, அத்தனை வானரமும் சேர்ந்து பாலம் அமைக்க ராமருக்கு உதவிய பொழுது எல்லா வானாரங்களையும் ஆசிர்வதித்த ராமார், சிறு உருளை கல்லை உருட்டிய "அணிலையும்"மறக்க வில்லை. அதனால், நமக்கு எந்த வேலை தந்தாலும், அதுவே மிக பெரிய பாக்கியம் என்று ஏற்றுக்கொள்ளவேண்டும். எதுவுமே குறை நோக்காமல், எல்லாமே ஒன்று என்கிற திட உறுதியுடன் செயல் பட்டால், கடைசியில் அவர் அருகில் இருப்பதை உணர்த்தி, அவர் கனிவுடன் நமக்கு அருளிய ஆசிர்வாதம் என்ன என்பதையும், நம்மை உணரச் செய்வார். அதை நம்புங்கள். நான் நம்பினேன். கரை ஏறிவிட்டேன்! இது உங்கள் அனைவரின் முறை. தீர்மானியுங்கள்! என்றார்.

பொறுமையாக யோசித்தேன்.

"இதில் தடங்கல்கள் வந்தால்? நாம் மனிதர்கள் தானே?"

"அது ஒரு "கால"சோதனை, நிரந்தரமில்லை. பொறுமையாக இருந்தால் சூரியனைகண்ட பனி போல் விலகிவிடும். பின்னர் ஆனந்தம் என்பது காட்டாற்று வெள்ளமாகிவிடும்! அதையும் எதிர்கொள்ள மனதை வலுப்படுத்திக் கொள்ளுங்கள். பின்னர் புரியும் அனைத்தும்."

கூடவே..........

"இந்த வருட (2015) கோடகநல்லூர் புனித நாளை மிகச் சிறப்பாக நடத்த வரிந்து கொள்ளுங்கள்! அமைதி காக்கவும்!"என்கிற உத்தரவுடன் அந்த கலந்துரையாடல் நிறைவு பெற்றது.

"வரிந்து கொள்ளுங்கள்........... ஹ்ம்ம்! சரி! ஒரு கை பார்த்துவிடுவோம்! என்று தீர்மானித்து, அக்டோபர் மாத முதல் நாளில், ஏற்பாடுகளை பேசி தீர்மானிக்க கோடகநல்லூர் நோக்கி பயணமானேன்.

ஆறு மாதங்களுக்கு முன்பே ஒரு முறை அங்கு சென்ற பொழுது அர்ச்சகரிடம் இந்த நாளை பற்றி கூறி "அந்த நாளில் எங்களைப் போன்றவர்களுக்கும் இங்கு வந்து சிறப்பிக்க வசதி செய்து தரவேண்டும்"என்று கேட்டிருந்தேன்.

இம்முறை அங்கு சென்ற பொழுதுதான் புரிந்தது அபிஷேகம் நடக்க வேண்டிய அந்த நேரத்தில் அந்த கோவிலில் வைத்து ஒரு திருமணம் நடத்த நிச்சயிக்கப் பட்டிருந்தது. அப்படியானால், நாம் நினைத்த அபிஷேகம் எப்படி நடக்கும்? என்று ஒரு கேள்வி எழ, அதற்கும் அர்ச்சகரே "அன்று மிக முக்கியமான முகூர்த்த நாள்! இந்த ஊரில் உள்ள ஒரு பெரிய மனிதரின் மகளுக்கு கல்யாணம்! அதை நடத்தி வைத்துவிட்டு, பின்னர் 11 மணி அளவில் உங்கள் அனைவர் சார்பாக நடக்கும் அபிஷேக ஆராதனைகளை நடத்தலாமே!"என்றார்.

"அவர் சொல்வதும் சரிதான். ஒருவருக்கு அந்த புண்ணிய நாளில் நல் வாழ்க்கை அமைகிறது. அதுவும் நடக்கட்டும். பின்னர் அகத்தியப் பெருமான் விரும்பியபடி திருமஞ்சன ஆராதனைகள் நடக்கட்டும்"என்று தீர்மானித்து, "சரி!'என்று ஒப்புக் கொண்டேன்!

"இந்த முறை அனைத்து தெய்வ ரூபங்களுக்கும் புது வஸ்த்திரம் சார்த்த வேண்டும்! ஒருவரை கூட விட்டுக் கொடுக்க கூடாது என்று கணக்கெடுத்துப் பார்த்தால், மொத்தம் 31 ஒன்று வஸ்திரங்கள் தேவை"என்று வந்தது.

அனைத்தையும் உங்கள் அருளால் கொண்டு வந்துவிடுகிறோம். நல்லபடியாக நடத்திக் கொடுக்க வேண்டியது, உங்கள் செயல் என்று வேண்டிக் கொண்டு, அன்றைய தினம் நிவேதனம் செய்ய வேண்டிய பிரசாதங்களை, அபிஷேக திரவியங்களை குறித்துக் கொண்டு ஒரு முடிவுடன் விடை பெற்றேன்.

அப்பொழுது தெரியவில்லை, யாரெல்லாம் எனக்கு சோதனைகள் வைக்கப் போகிறார்கள் என்று!

கோடகநல்லூர் சித்தன் அருள்........... தொடரும்!

சித்தன் அருள் - 247 - அந்தநாள் இந்த வருடம் (25/10/2015) - கோடகநல்லூர் - அகத்தியப் பெருமான் நடத்திய பெருமாளின் திருவிழா - II

$
0
0

​"இறைவா! அகத்தியப் பெருமானே! என்னுள் நின்று அனைத்தையும் நடத்திக் கொடு!"என்று வேண்டியபின் "அந்த நாளில்"நடத்த வேண்டிய விஷயங்களுக்கு என்னென்ன தேவை என்று குறித்துக் கொண்டேன்.

நினைத்தது மிக எளிதாகத்தான். பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் (அபிஷேகம்), புது வஸ்த்ரம், பூ மாலை, நிவேதனம்.

தனிமையில் அனைத்தையும் ஏற்பாடு செய்ய முடியும் என்றாலும், பெரியவர் சொன்ன படி பிறருக்கும் வாய்ப்பு  ​கொடுக்கவேண்டும் என்று தீர்மானித்து, என் நண்பர்கள் வட்டத்தில் ஒவ்வொருவரையும் தொடர்பு கொண்டேன். எல்லோரும் சம்மதம் தெரிவிக்கவே, அனைவருக்கும் வேலையை, பூசைக்கான சாமான்கள் வாங்குகிற முறையை பிரித்துக் கொடுத்தேன். எல்லாம் சுமுகமாக சென்றது.

எனக்குள் ஒரு சந்தேகம். எல்லாம் எளிதாக நடக்கின்றது என்றால், இனி வரும் நாட்களில் திடீரென்று எங்கிருந்தேனும் ஒரு தடங்கல் வந்து நிற்கும். அதுவே பெருமாள் தன் பக்தனை சோதிக்க வைக்கும் ஆப்பு. ஆதலால், ஒரு திட்டத்தை பகிர்ந்து கொடுத்துவிட்டு, இரண்டாவது திட்டத்தை மனதுள் மறைத்து வைத்திருந்தேன்.

வஸ்த்ரம் வாங்க செல்லலாம் என்றால், போக முடியாதபடி தடங்கல் வந்தது. அப்படி போக முடிந்தாலும், கிடைக்கிற வஸ்த்ரங்கள் திருப்தி இல்லாமல் இருந்தது. நாள் வேகமாக ஓடி விழாவுக்கு இன்னும் இரண்டு நாள் என்கிற நிலையில் வந்து நின்றது.

இரண்டு நாட்களுக்கு முன்னே வந்து அனைத்தையும் கவனித்துக் கொள்கிறேன் என்று சொன்ன ஒரு நண்பர், தனிப்பட்ட வாழ்க்கையின் பிரச்சினையினால் வருவது சந்தேகம்தான் என்று கூறினார். அவரிடம் வாங்கச் சொன்ன விஷயங்கள், சற்று அதிகமானதுதான். இனி நாமே களத்தில் இறங்கினால் தான் உண்டு என்று நினைத்து மறுநாள் விட்டுப்போன விஷயங்களை, பிரித்துக் கொடுக்காத விஷயங்களை சேர்ப்பதில் கவனம் செலுத்தினேன்.

24/10/2015, சனிக்கிழமை மாலை 6 மணி. மறுநாள் காலை 2 மணிக்கு கிளம்பலாம் என்று தீர்மானித்தேன். 7 மணிக்கு ஒரு நண்பர் தொலைபேசியில் கூப்பிட்டு, அவருக்கு பகிர்ந்து கொடுத்ததில் ஒரு பகுதிதான் வாங்க முடிந்தது என்றும், பூ மாலை வாங்கவில்லை என்றும் தெரிவித்தார். 

மறுநாள் கல்யாண முகூர்த்த நாள்! இந்த கடைசி நிமிடத்தில் தேடினால் எங்கு பூ மாலை வாங்க முடியும். மேலும் நான் கோடகநல்லூர் சென்று சேரும் பொழுது காலை மணி 9 ஆகிவிடும். பின்னர் தேடி கண்டுபிடித்து............. எப்படி முடியும்.

"என்ன பெருமாள் நீ?"என்று கேட்டுவிட்டேன்.

"எனக்கு வசதி செய்து கொடுக்கவில்லை என்றால், என்ன இருக்கிறதோ அதைத்தான் தருவேன். நீ அதை வைத்து திருப்தி பட்டுக் கொள்ளவேண்டும்"என்று முடித்துவிட்டேன்.

உடனேயே அகத்தியப் பெருமானை த்யானித்து "என்ன அய்யனே! இப்படி தவிக்க விட்டால், எப்படி?  நீங்களாவது கனிவு கூர்ந்து அருள் புரியக் கூடாதா?"என்று விண்ணப்பத்தை சமர்ப்பித்தேன்.

பின்னர், ஒரு அரை மணி நேரம் அமைதியாக இருந்தேன். எதுவும் யோசிக்கவில்லை. அமைதியில்தான் மனம் ஒன்று படும். மனம் ஒன்று பட்ட பொழுது, இன்னொரு நண்பரின் நினைவு வர, அவரை தொடர்பு கொண்டேன்.

அவர் முன்னரே வந்து திருச்செந்தூர் கோவிலில் இருப்பதாகவும், நாளை 8 மணிக்குள் கோடகநல்லூர் வந்துவிடுவதாகவும் கூறினார்.

மேலும் என்ன விஷயம் என்று வினவ..........

பெருமாளுக்கும் தாயாருக்கும் அவர்கள் உயரத்துக்கு மாலை வேண்டும். அதுவும் நாளை காலை 9 மணிக்குள் வேண்டும். உங்களால் திருநெல்வேலியில் வாங்க முடியுமா? என்றேன்.

அதற்காக காத்திருந்தது போல், "நாளை முன்னரே திருநெல்வேலியில் விசாரித்து காலை 9 மணிக்குள் கோடகநல்லூர் கொண்டு சேர்ப்பதாக வாக்குரைத்தார்.

அடுத்த விஷயமாக, பிரசாதம் செய்வதற்காக ஏற்பாடு செய்திருந்த சமையல்காரரை தொடர்பு கொண்டு அவர் வந்து சேர்வதையும் உறுதி செய்த பின், பூசைக்காக வாங்கிய விஷயங்களை தவிர்த்து, என் பக்கத்திலிருந்து அங்கு வரும் அகத்தியர் அடியவர்களுக்கு பெருமாளின் சார்பாக கொடுப்பதற்காக "786"எண் கொண்ட ரூபாய் நோட்டுக்களை திரட்டினேன். 

என் நண்பர், ஒரு கட்டு (100 எண்ணிக்கை) கொண்டு தந்திருந்தார். அது போதாது என்று தோன்றியது. பூசை அறையை குடைந்த பொழுது மேலும் இரண்டு கட்டுகள் கிடைத்தது. எடுத்து வைத்துக் கொண்டேன்.

ஒதிமலையில் ஓதியப்பருக்கு அபிஷேகம் செய்த எண்ணையை அகத்தியர் அடியவர்களுக்காக எடுத்து வைத்துக் கொண்டு, பெருமாள் அபிஷேகத்துக்காக பிரத்யேகமாக வாங்கிய "ஜவ்வாது எண்ணை"என்று லிஸ்ட் நீண்டு கொண்டே சென்றது.

ஒரு வழியாக அனைத்தையும் ஒரு பையில் சுற்றி வைத்த பொழுது அகத்தியப் பெருமான் சொல்லி அனுப்பிய "இன்ப அதிர்ச்சியான செய்தி"சென்னையிலிருந்து என்னை வந்து சேர்ந்தது.

புல்லரித்து போன மன நிலையுடன் அப்படியே அமர்ந்துவிட்டேன். அது எனக்கு மட்டுமல்ல, அத்தனை அகத்தியர் அடியவர்களுக்கும் அவர் அளித்த பரிசு.

கோடகநல்லூர் சித்தன் அருள்................ தொடரும்!

சித்தன் அருள் - 248 - அந்தநாள் இந்த வருடம் (25/10/2015) - கோடகநல்லூர் - அகத்தியப் பெருமான் நடத்திய பெருமாளின் திருவிழா - III

$
0
0

​சென்னையில் வசிக்கும் அந்த வயதான பெண்மணி அகத்தியப் பெருமானின் ​சிறந்த பக்தை.  நாடி வாசித்தவரிடம் சிஷ்யையாக இருந்து அகத்தியர் அருளை பெற்று வந்தவர். அகத்தியப் பெருமான் உத்தரவால் எங்கு புண்ணிய விஷயங்கள் நடந்தாலும், தவறாமல் பங்கு பெற்று, அவர் மீது அத்தனை திட நம்பிக்கை வைத்திருப்பவர்.

மூப்பு எய்திய காலத்திலும், தன் வீட்டில் பூசை அறையில் அகத்தியப் பெருமானுக்கு தினமும் பூசை செய்து வருபவர். கூடவே த்யானத்தில் அமர்ந்து, அகத்தியப் பெருமானிடம் தன் பிரார்த்தனைகளை சமர்ப்பிப்பார்.

சமீபத்தில் அவர் குடும்பத்தில், பித்ருக்களுக்கு ஸ்ரார்த்தம் (வருட/மாத திதி) வந்தது. மாளயபட்சத்தின் போது தினமும் தர்ப்பணம் செய்து பித்ருக்களுக்கு திதி கொடுப்பது இந்து மதத்தின் வாழ்க்கை முறையில் ஒன்று. அதன் படி குறிப்பிட்ட நாட்களுக்கு தொடர்ந்து திதி கொடுத்து வந்தார்.

சமீபத்தில் நவராத்திரியின் போது வங்கிகளுக்கு நீண்ட விடுமுறை இருந்தது. இவரிடம் கையில் இருந்த பணம் தீர்ந்துவிட, சரி வங்கி எ.டி.எம். இல் போய் பணம் எடுக்க பார்த்த பொழுது, எல்லா எ.டி.எம்மிலும் பணம் காலியாக இருந்ததால், இவரால் பணம் எடுக்க முடியவில்லை.

பணத்துக்கு என்ன செய்வது என்று யோசித்து "தெரிந்த புரோஹிதர் தானே வரப்போகிறார். இரண்டு நாட்களில் வங்கி திறந்ததும் எடுத்து தந்துவிடலாம் என வாக்கு கொடுத்து, திதி கொடுப்பதை நிறுத்தாமல், தொடர்ந்து செய்துவிடலாம்"என தீர்மானித்தார்.

புரோஹிதரை கூப்பிட்டு பேசிய பொழுதுதான், அவரின் உண்மை சொரூபம் வெளிவந்தது.

புரோஹிதர் அந்த அம்மாவிடம் "நீங்க வேணும்னா பண்ணுங்க, இல்லைனா பண்ணாதீங்க. ஆனா எனக்கு பணம்தான் முக்கியம். பணம் கொடுத்தால்தான் செய்து கொடுப்பேன்"என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இதை கேட்டு அந்த அம்மா அதிர்ந்து போக, வேறு என்ன வழி, அந்த புரோஹிதர் கேட்ட பணம், மற்ற செலவுகளுக்கு என்று 15000 ரூபாய் வேண்டிவரும். யாரிடம் கேட்பது? இந்த வயதான காலத்தில் வங்கியில் பணம் இருக்கிறது, இன்னும் இரண்டு நாட்களில் எடுத்துக் கொடுத்து விடுகிறேன் என்று கூறினாலும், யார் தருவார்கள்? என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, எப்போதும் புண்ணிய யாத்திரை செல்லும் முன், அந்த அம்மாவை வந்து பார்க்கும் ஒரு அகத்தியர் அடியவர், தான் 25/10/2015 அன்று கோடகநல்லுர் சென்று பெருமாளுக்கு திருவாராதனம் (அபிஷேகம்) நடக்கப் போகிற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறியிருக்கிறார். அந்த அன்பர் சொன்னதை கேட்டாலும், அந்த அம்மாவின் மனதில் அவர் பிரச்சினைதான் முன் நின்றது. 

அவரிடம், "15000 ரூபாய் கடன் தர முடியுமா? இன்னும் ஒரு நான்கு நாட்களில் திருப்பி தந்துவிடுகிறேன்"என்றார்.

அவரோ, "தாராளமாக தருகிறேனே! ஆனால் இத்தனை பணம் உங்களுக்கு எதற்கு?"என்று வினவினார்.

அந்த அம்மையார் நடந்ததை அனைத்தையும் விவரித்தார்.

"ஹ்ம்ம்! இன்று புரோகிதம் இப்படித்தான் இருக்கிறது. அந்த இறைவன்தான் இவர்களை எல்லாம் திருத்தவேண்டும். சரி நான் போய் பணம் எடுத்து வருகிறேன்"என்று கூறி சென்றார்.

எங்கோ தள்ளியிருக்கும் எ.டி.எம்மில் போய் நின்று, தன் முறை வருவதற்காக காத்திருக்கும் பொழுது, அந்த அம்மாவிடம் இருந்து இவர் கைபேசிக்கு அழைப்பு வந்தது.

"பணம் வேண்டாம்! நீங்கள் உடனே எங்கள் வீட்டுக்கு வாருங்கள். இங்கு வந்ததும் என்னவென்று கூறுகிறேன்"என்றார் அந்த அம்மா.

என்ன நடக்கிறது என்று தெரியாமலே, இவர் அந்த அம்மாவின் வீடு போய் சேர்ந்தார்.

"என்ன நடந்தது? ஏன் பணம் வேண்டாம்னு சொல்லிட்டீங்க?"என்று வினவ 

நடந்ததை விவரித்தார் அந்த அம்மா!

அவரை அனுப்பிவிட்டு, மிகுந்த மன வேதனையுடன் அந்த அம்மா, பூசை அறையில் அமர்ந்து அகத்தியப் பெருமானிடம் தன் நிலையை, வேண்டுதல் வழியாக சமர்பித்து, தன்னை வழி நடத்த கூறியிருக்கிறார். பின்னர் அகத்தியப் பெருமானை நினைத்து த்யானத்தில் அமர்ந்துவிட்டார்.

எங்கும் ஒரே அமைதி. சற்று நேரத்தில் சூட்சுமத்தில் (த்யானத்தில் ஒன்றி இருக்கும் நிலையில் பேசுவது) வந்துவிட்டார் அகத்தியப் பெருமான்.

"என் மகளே! ஏன் இந்த கலக்கம். நடந்ததை எல்லாம் நான் பார்த்துக் கொண்டு தான் இருந்தேன். நீ, நான் சொல்வதுபோல் செய். என் பிள்ளைகள் அனைவரும் ஒன்று சேர்ந்து கோடகநல்லுரில் அந்த புனிதநாளில் இறைவனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, அன்னம் பாலிக்கப் போகிறார்கள். நீ உன்னால் முடிந்த அளவுக்கு உதவி செய். அதுவே உன் பித்ருக்களுக்கு நீ செய்யும் திதியாக ஏற்றுக் கொள்ளப்படும். அதன் பின் ஒரு போதும், நீ இங்கு உன் பித்ருக்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க வேண்டாம். அப்படி உனக்கு கொடுக்க வேண்டும் என்று தோன்றினால், அதே கோவிலில், ஒரு நேரம் நிவேதனத்துக்கு உன்னால் முடிந்ததை அனுப்பி வை. மற்றவை நான் பார்த்துக் கொள்கிறேன்"என்றார்.

அந்த அம்மா உடனேயே இவரை திருப்பி அழைத்து, தன்னிடம் இருந்த ஒரு சிறு தொகையை கொடுத்து அனுப்பி, அன்று அங்கு நடந்த பிரசாத விநியோகத்தில் பங்கு பெற்றார்.

சரி! இதில் எங்களுக்கு என்ன பரிசு அகத்தியர் கொடுத்திருக்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

"என் பிள்ளைகள்"எனக் கூறியதை கவனியுங்கள். அன்றைய தினம் அங்கு இருந்த அனைவரும், அகத்தியரால் "என் பிள்ளைகள்"என்று ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள். அதற்காக, வர முடியாமல் போனதால், எங்கள் யாருக்கும் அது கிடைக்கவில்லையே, என்று மற்றவர்கள் நினைக்க வேண்டாம். அன்றைய தினம் கோடகநல்லூர் நம் நினைவில் ஒரு முறை வந்திருந்தாலே, அங்கிருந்து அனைத்திலும் பங்கு பெற்ற தகுதி அனைவருக்கும் இருக்கிறது, என்று மற்றுமோர் செய்தி கூட உண்டு.

இறைவனிடமும், அகத்தியரிடமும் வேண்டிக் கொண்டு அனைத்தையும் செய்தாலும், நாம் என்ன செய்கிறோம் என்பதை அகத்தியர் பார்த்துக் கொண்டிருப்பார் என ஒரு பொழுதும் எதிர்பார்க்கவில்லை. இதைக் கேட்டதும், "அடடா! எப்படி கருணையுள்ள ஒரு தகப்பனாக நம் அனைவரையும் அவர் வழி நடத்திக் கொண்டிருக்கிறார்"என்று யோசித்துதான் ஆனந்தத்தில் அமர்ந்துவிட்டேன்.

உடனேயே ஒரு எண்ணம் உதித்தது. "அவரையே, அங்கு அழைத்து, அனைத்தையும் நடத்திக் கொடுங்கள் என்று வேண்டிக் கொண்டால்? அவர் வந்து தான் ஆக வேண்டும்! அகத்தியப் பெருமானை அன்பினால் கட்டிவிடலாம்! அவர் வந்தால் அனைவரையும் ஆசிர்வதிப்பாரே!"

உடனேயே பூசை அறையில் இருக்கும் அவர் படத்தின் முன் போய் நின்றேன்.

"அய்யனே! அகத்தியப் பெருமானே! மனிதர்களாகிய நாங்கள் ஆசைப்படத்தான் முடியும். ஆனால் நிகழ்ச்சிகளை நடத்தி வைத்து, நிறைவு செய்வது இறை, உங்கள் அருள் தான். உங்களிடம் ஒரு வேண்டுதல். நாளை கோடகநல்லூர் வந்து எல்லாவற்றையும் நல்லபடியாக நடத்திக் கொடுத்து, எல்லோரையும் ஆசிர்வதித்து, அவரவர் வேண்டுதல்கள் நிறைவேற நீங்கள்தான் வழி செய்ய வேண்டும். மேலும் கோடகநல்லூர் வந்து இறைவனை, தொழுபவர்கள், பத்திரமாக யாத்திரை செய்து, திரும்பி அவரவர் இல்லம் சென்று சேரும் வரை, தாங்கள் கூட இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும்"என வேண்டிக் கொண்டேன்.

25/10/2015, ஞாயிற்று கிழமை காலை 4 மணிக்கு இரு நண்பர்களுடன் காரில் புறப்பட்டேன்.

அதுவரை சும்மா இருந்த வானம், புயல் மழை போல் கொட்டி ஊற்றியது. வண்டியில் அமர்ந்து பார்த்தாலே, பாதை எங்கும் வெள்ளம். ஒன்றுமே தெரியவில்லை.

"அவசரம் தேவை இல்லை. மெதுவாக செல்! என் கோவில் தாண்டியதும் மழையின் வேகம் குறைந்து விடும்!"என வந்தது அகத்தியரின் உத்தரவு, அந்த அதிகாலை நேரத்தில்.

ஆஹா! இவர் எங்கும் இருந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார் போல்! என நினைத்தேன். 

"சரி அய்யா! தங்கள் உத்தரவு"என்று அவர் இருக்கும் திசை நோக்கி கை எடுத்து கும்பிட்டு, நண்பரிடம், "என்ன நடந்தாலும் சரி! மெதுவாக போனால் போதும்! அவசரம் தேவை இல்லை"என்று அகத்தியரின் உத்தரவை பகிர்ந்து கொண்டேன்.

பெரியவர் சொன்னது போலவே, அவர் கோவில் தாண்டியதும், மழையின் வேகம்  சிறு சாரலாக மாறியது!

உடனேயே அகத்தியருக்கு மனதார நன்றியை சமர்ப்பித்துவிட்டு, திருநெல்வேலியை நோக்கி பயணமானோம்.

கோடகநல்லூர் சித்தன் அருள்............................... தொடரும்!

சித்தன் அருள் - 249 - அந்தநாள் இந்த வருடம் (25/10/2015) - கோடகநல்லூர் - அகத்தியப் பெருமான் நடத்திய பெருமாளின் திருவிழா - IV

$
0
0
[ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ! அகத்தியரின் சித்தன் அருள் வலைப்பூ, அவர் அருளாலும், உங்களைப் போன்ற அகத்தியர் அடியவர்களின் ஊக்குவிப்பினாலும், இன்றைய தினம் 10 லட்சம் பக்கப் பார்வைகளை பெற்றது! மிக்க நன்றியை உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்! கோடகநல்லூர்  திருவிழா தொடர்கிறது!]

அதெப்படி? நாமோ சாதாரண மனிதர்கள்! நமது எளிய வேண்டுதல்களுக்கு கூட சித்தர்களும், இறைவனும் இத்தனை கருணை புரிவார்கள்? அடடா! ஏதோ தெரிந்தவரையில் என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறோம், அதையும் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டு, வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கிறார்களே! ஹ்ம்ம்! இன்று கோடகநல்லூரில் வந்து சேர்பவர்கள் அனைவரும் மிகுந்த பாக்கியசாலிகள். ஏதேனும் திருப்புமுனை அவர்களுக்கு, வாழ்க்கையில் அமையலாம்.  எது நடந்தாலும் நல்லதாகவே நடக்கட்டும் அகத்தியப் பெருமானே!"என்றெல்லாம் எண்ணங்கள் மனதுள் ஓடிக்கொண்டிருக்க, திடீரென "ஓம் நம சிவாய"என மனதுள் ஜபம் வந்தது. உடனே ஞாபகம் வந்து, வெளியே எட்டிப்பார்க்க, தூரத்திலிருந்து, லிங்க ரூபத்தில் அமர்ந்திருக்கும் "மொட்டை பொத்தை"என்கிற மலை (வள்ளியூர்) வந்து கொண்டிருந்தது.


எப்போது இந்த மலையை பார்க்கும் பொழுதும், சிவபெருமானே அங்கு விரும்பி வந்து அமர்ந்ததாக தோன்றும். எனக்கு தெரிந்த வரையில், அந்த மலை மீது யாரும் ஏறியது கிடையாது. ஏன் என்றால், அத்தனை செங்குத்தாக, வழி எதுவும் இன்றி நிற்கும் மலை.  சற்று நேரம் இந்த மலையை பார்த்தபடி ஜெபித்து, மேலும் பயணத்தை தொடர்ந்தோம்.

இதற்கிடையில், திருநெல்வேலியில் பூ மாலை வாங்க சென்ற நண்பர் தொடர்பு கொண்டு, மாலை கிடைப்பதில் உள்ள ஒரு சில பிரச்சினையை கூற, திட நம்பிக்கையுடன், நேரத்துக்கு கிடைத்துவிடும். வாங்கி வந்து சேருங்கள் என்று கூறிவிட்டு, கோடகநல்லூர் வந்து சேரும் பொழுது மணி காலை 8 ஆகிவிட்டது.

முதல் நாள் தான் பிரம்மோத்சவம் நிறைவு பெற்று இருந்ததால், தூரத்திலிருந்து பார்த்த பொழுது அதிக கூட்டம் இல்லை. இரவில் மழை பெய்து, கோவில் முன்புறத்தை நன்றாக சுத்தப்படுத்தி இருந்தது.

கோவில் கொடி மரத்தின் முன் நின்று நமஸ்காரம் செய்து வேண்டிக் கொண்டேன்.


"பெருமாளே! உங்கள் அருளால் வந்து சேர்ந்துவிட்டோம். எல்லாவற்றையும் மிகச் சிறப்பாக செய்திட அருள வேண்டும்! அனைவரையும் நீங்கள் ஆசிர்வதிக்க வேண்டும்!"


அர்ச்சகர் வெளியே வந்தார்.


"நமஸ்காரம்!"என்றேன்.


"நமஸ்காரம்! வந்துவிட்டீர்களா! உங்களைத்தான் பார்த்து பேச வேண்டும் என்று இருந்தேன்!"என்றார்.


"என்ன விஷயம்?"


"9 மணிக்கே பூசை, அபிஷேகம் தொடங்கி, 10 மணிக்கு நிறுத்தி வைத்துவிட்டு, பின்னர் அந்த கல்யாணத்தை நடத்தி மணமக்களை அனுப்பிவிட்டு, மறுபடியும் தொடரலாமே! எனக்கும் சற்று எளிதாக இருக்கும்!"என்றார்.


எதுவுமே யோசிக்காமல், "வேண்டாம்! முன்னரே தீர்மானித்தபடி 11 மணிக்கு பூசை அபிஷேகம் தொடங்கினால் போதும்! என் நண்பர்கள் வட்டத்தில் அனைவரிடமும் 11 மணி என்று கூறிவிட்டேன். அதனால் அனைவரும் திருநெல்வேலியில் பூசை அபிஷேகத்துக்கான சாமான்களை வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். மேலும் சித்தன் அருளில் 11 மணி என்று போட்டாகிவிட்டது. ஆதலால், நிறைய அடியவர்கள் 10 மணிக்குத்தான் வந்து சேருவார்கள். எல்லோருக்கும் பெருமாளுக்கு அபிஷேகம் நடக்கிறதை பார்க்கிற பாக்கியம் கிடைக்க வேண்டும். ஆதலால், 11 மணிக்கு தொடங்கி பின்னர் எத்தனை மணிக்கு நிறைவு பெற்றாலும் பரவாய் இல்லை. நாங்கள் காத்திருக்கிறோம்"என்று கூறினேன்.


நான் இப்படி கூறுவேன் என்று அவர் எதிர் பார்க்கவில்லை போலும்.


"சரி! உங்கள் விருப்பம்"என்று முடித்துக் கொண்டார்.


நான் உள்ளே சென்று பெருமாள் தாயார்களை கண்டு வணங்கினேன்.  சித்தன் அருளில் பங்கு பெரும், ஒரு அகத்தியர் அடியவர் வேண்டுகோளுக்கு இணங்க, வாங்கி சென்ற துளசி மாலையை அர்ச்சகரிடம் கொடுத்து பெருமாளுக்கு சார்த்தச் சொன்னேன். உணமையிலே, அதன் பின் பெருமாள் சற்று புன்னகையுடன் காட்சி கொடுத்தார் என்பதே உண்மை.


"அனைத்து விக்கிரகங்களுக்கும் வஸ்த்திரம் கொண்டு வருகிறார்கள். இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்துவிடும். அதையும் சார்த்திட தயாராக இருங்கள்!"என அர்ச்சகரிடம் கூறிவிட்டு, வெளியே வந்து சமையல்காரர் வந்துவிட்டாரா! என்று தேடினேன்.


அவர் முன்னரே வந்து அமர்ந்திருக்க, "என்ன விஷயம்? யாருக்காக காத்திருக்கிறீர்கள்? உங்கள் வேலையை தொடங்க வேண்டியது தானே! கிளம்புங்கள்"என்று சொல்லி அனுப்பிவிட்டு, நதியில் குளித்துவிட்டு வரலாம் என்று தயாரானேன்.


இதற்குள் கல்யாணத்துக்கு வந்தவர்கள் கூட்டம். அகத்தியர் அடியவர்கள் என்று ஒரு பெரிய திருவிழா நடப்பது போல் கோவில் வாசல் மாறிவிட்டது.


நண்பர்களை அழைத்துக் கொண்டு, தாமிரபரணி கரையை அடைந்ததும், ஆச்சரியப்பட்டுப்போனேன். ஒரு 50 பக்தர்கள் பெரியவர்களும், பெண்களும், சிறுவர்களும் குளித்துக் கொண்டிருந்தார்கள். பொதுவாகவே நதிக்கரை அமைதியாக இருக்கும். ஆனால் அப்போது ஒரே சப்தம். யார் இவர்கள் என்று விசாரித்த பொழுது, காக புசுண்டர் நாடியில் அன்றைய தினத்தை பற்றி வந்த வாக்கை கேட்டு தாமிரபரணியை வழிபட்டு, பெருமாளை கண்டு ஆசிர்வாதம் பெற்று செல்ல வந்தவர்கள் என்று தெரிய வந்தது.




நான் கரையில் அமர்ந்து கொண்டேன். நண்பர்கள் மெதுவாக தாமிர பரணி நதியில் இறங்க முயன்றார்கள். அப்போது நான் கூறினேன்.

"நதியில் இறங்கி கிழக்கு பார்த்தோ, வடக்கு பார்த்தோ கை கூப்பி நில்லுங்கள். சங்கமா முனிவர் கூறிய மந்திரத்தை நான் கரையில் அமர்ந்து கூறுகிறேன். நீங்களும் கூறிவிட்டு பின்னர், கிழக்கு நோக்கி நின்று முங்கிக் குளியுங்கள். ஒன்றை முயன்று பாருங்கள். 36 முறை முங்கி எழ வேண்டும். அது யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் ஒவ்வொருமுறையும், தாமிரபரணி ஓடுகிற இந்த பூமியில் நீருக்கு அடியில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யுங்கள். நீருக்கடியில் நமஸ்காரம் செய்யும் பொழுது கண் திறந்து பார்த்தால் என்ன காண்கிறீர்கள் என உங்களுக்கு அப்போது தெரியும்"என்றேன்.


அவர்கள் வடக்கு நோக்கி கை கூப்பி நிற்க, கரையில் அமர்ந்து அந்த ஸ்லோகத்தை சொல்லிக் கொடுத்தேன். கூறிவிட்டு அவர்கள், நதியின் நடுவை நோக்கி குளிப்பதற்கு நடந்து சென்றார்கள்.


நான் நதியில் இறங்காமல் அமர்ந்திருந்தேன். ஒருவர் தன் குடும்பத்துடன் குளிக்க வந்தார். நான் நண்பர்களுக்கு சொல்லிக் கொடுத்ததை கண்டவர், எனக்கும் சொல்லி கொடுங்களேன்! என்றார். அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் சொல்லிக் கொடுக்க, அடுத்து ஒரு கூட்டம். இப்படி ஒவ்வொருவருக்கும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க திடீரென்று ஒரு யோசனை.


"ஆமாம்! எனக்கு யார் சொல்லித்தருவா!"


யோசித்து பார்த்த பொழுது யாரும் இல்லை. "சரி இவர்களுக்கு சொல்லிக் கொடுத்ததே, நான் சொன்னதாக ஏற்றுக்கொள் தாயே"என்று கூறிவிட்டு, நானும் நதியில் நீராட இறங்கினேன்.


நதியில் நீர் மட்டம் குறைவாகவே இருந்தது. அதனால் இழுவை அதிகம் இல்லை. கைகூப்பி கிழக்கு நோக்கி நின்று அகத்தியரையும், லோபாமுத்திரை தாயையும், கோடகநல்லூர் பெருமாள், தாயார் இவர்களை த்யானித்துவிட்டு தாமிர பரணியில் மூழ்கினேன்.


கிழக்கு நோக்கிய முதல் நமஸ்காரம் எளிதாக வந்தது. நேரம் நன்றாக இருக்கும் பொழுதே நல்லதை செய்து விட வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். அதனால், 36 நமஸ்காரங்களை நோக்கி செயல் பட்டேன். 18 வது நமஸ்காரம் செய்து முடித்தவுடன் நீருக்கு அடியிலேயே இருந்து கண் திறந்து பார்க்க, அங்கே நான்கு பாதங்கள் தென்பட்டது. அகத்தியப் பெருமான், லோபா முத்திரையின் பாதங்கள்தான் அவை. தாமிர பரணித் தாய் கனிவுடன் கை தூக்கி ஆசிர்வதிக்கிற நிலையில் கண்டு,


"இது போதும் எனக்கு பெற்றோர்களே! இது போல் எல்லோருக்கும், அவர்கள் அறிந்தோ, அறியாமலோ அருளவேண்டும்!"என வேண்டிக் கொண்டேன்.


19வது நமஸ்காரமாக "ஒரு வாசி யோகி இறைவனுக்கு செய்கிற நமஸ்காரத்தை"செய்துவிட்டு, 36 எண்ணிக்கைவரை சென்று பின் ஸ்நானத்தை முடித்து கரை ஏறினேன். யாரிடமும் எதுவும் பேச தோன்றவில்லை. கரையிலேயே கிழக்கு நோக்கி அமர்ந்து, நதி நீரை எடுத்து, விபூதி குங்குமம் பூசிக் கொண்டு கோவிலை பார்த்து நடந்தேன்.


திரும்பி நதியை பார்த்த பொழுது, அந்த 50 பேர் கூட்டமும், கையில் தாம்பூலத் தட்டுடன், தாமிரபரணி தாய்க்கு பூசை செய்ய நதி நடுவை நோக்கி நடந்து கொண்டிருந்தனர். அனைவரும் ஒரு இடத்தில் சேர்ந்து நின்று, அவர்களில் பெரியவர் ஒருவர் மந்திரம் சொல்லிக் கொடுக்க, அதை அவர்கள் திருப்பி சொல்ல, ஒரு 15 நிமிடம் பூசை நடந்தது. தாமிரபரணி தாய்க்கு இப்படி ஒரு பூசையா! என்று சந்தோஷமாக பார்த்தபடி நின்றேன்.




கல்யாணம் முடிந்து, கல்யாணக் கூட்டம் விலகியது. அகத்தியர் அடியவர்கள் ஒரு 100 பேர்கள் இருந்தனர். இன்னும் வருவார்கள் என்று தோன்றியது.

"இந்தத் திருவிழா அகத்தியரால் நடத்தப் படுகிறது. நாமெல்லாம் ஒரு கருவி. யார் யாரெல்லாம் வரவேண்டும் என அவர் தீர்மானிக்கின்றாரோ அவர்கள் நிச்சயம் வந்து சேர்வார்கள்", என்று மனதுள் ஒலிக்க, சரி! அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தபடி கோவிலுக்குள் சென்றேன்.

ஒரு நண்பர் வந்து "அர்ச்சகரிடம், உற்சவ மூர்த்தியின் அபிஷேகத்தை வெளியே மண்டபத்தில் வைத்து நடத்துங்கள் என்று வேண்டிக் கொண்டேன். அவரும் சரி என்று ஒத்துக் கொண்டுவிட்டார். அதனால், உற்சவ மூர்த்தியின் பெரிய பீடத்தை வெளியே தூக்கி வைக்க ஆட்கள் தேவை"என்றார்.


அதுவும் நல்லதுதான் என்று யோசித்து, நண்பர்களுடன் உள்ளே சென்று பீடத்தை வெளியே தூக்கி வைத்தோம். இதற்கிடையில், பெங்களூர், கோயம்புத்தூரில் இருந்து வந்திருந்த இரு அகத்தியர் அடியவர்கள் மேலே தூக்கி கட்டியிருந்த திரைகளை கழற்றி தொங்க விட்டனர்.


இதற்கிடையில், திருநெல்வேலியில் இருந்து நண்பர்கள் குழு வந்து சேர்ந்தது. வஸ்த்திரம், பூ மாலை, உதிரிப் பூ, தாமரை மொட்டுக்கள், துளசி என வந்து சேர, ஒவ்வொரு அகத்தியர் அடியவர்களும், தாங்களாகவே முன் வந்து அவற்றை எடுத்து, மண்டபத்தில் வைத்து, அங்கேயே அமர்ந்து, பிரித்து சுத்தப்படுத்தி வைக்க ஆரம்பித்தனர்.


கோடகநல்லூர் சித்தன் அருள்................. தொடரும்!

சித்தன் அருள் - 250 - அந்தநாள் இந்த வருடம் (25/10/2015) - கோடகநல்லூர் - அகத்தியப் பெருமான் நடத்திய பெருமாளின் திருவிழா - V

$
0
0
​இதற்கிடையில், இரண்டாவதாக திருநெல்வேலியில் இருந்து வந்து சேர்ந்த ​நண்பர்கள், தாமிரபரணியில் நீராட விரும்பினார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு நதிக்கரையில் அமர்ந்து, சங்கமா முனிவரின் ஸ்லோகத்தை சொல்லிக் கொடுக்க, அவர்களில் இருவர் தாம்பூலம் வைத்திருந்தனர். வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள் துண்டு, பூ, ஒரு ரவிக்கை துண்டு போன்றவற்றை ஒரு தட்டில் வைத்து, நதியின் நடுவரை சென்று கிழக்கு நோக்கி நின்று தாமிரபரணி தாய்க்கு த்யானம் செய்து கொடுத்தனர். அதை நதியில் விட, அது மெதுவாக அசைந்து செல்வது காண கண் கொள்ளக் காட்சியாக இருந்தது.
மறுபடியும் கோவிலுக்கு வந்து பார்க்க, கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. மொத்தம் ஒரு 250 பேர்கள் இருந்திருக்கலாம் என்று தோன்றியது. அனைவரும் அமைதியாக நின்று கொண்டு அல்லது அமர்ந்து கொண்டிருந்தனர். உற்சவ மூர்த்தியை தூக்கி வந்து மண்டபத்தில் உள்ள பீடத்தில் வைத்து, அபிஷேகம் தொடங்கினார்கள்.

முதலில் நறுமண எண்ணெய்களால் சுவாமிக்கு எண்ணை காப்பு போட்டு, அதிலிருந்து அபிஷேகம் செய்த எண்ணையை எடுத்து அங்கு அமர்ந்திருந்த அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும் உடலில் பூசிக் கொள்ள ஒவ்வொரு சொட்டு கொடுக்கப்பட்டது. சுத்தமான தாமிரபரணி நீர், பல விதமான நறுமண திரவியங்கள், 128 மூலிகைகள், அரிசி மாவு, பன்னீர், சந்தானம், பால் போன்றவைகளால் அபிஷேகம் நடந்தது.

பெருமாளுக்கு வலது பக்கமாக மண்டபத்துக்கு அருகில் நின்று அபிஷேகத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். அகத்தியப் பெருமான் ஒவ்வொரு அடியவர்களுக்கும் ஒரு வேலை கொடுத்திருந்தார். இல்லை! வேலை வாங்கிக் கொண்டிருந்தார். ஒருவர் பூசை சாமான்களை எடுத்துக் கொடுப்பதும், இருவர் மணி அடிப்பதும், ஒருவர் அபிஷேகத்துக்கான பாத்திரத்தில் நீரை நிறைப்பதும், ஒரு சிலர் பூக்களை ஆய்ந்து, துளசியை சீராக அமைத்து, இப்படி வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இதற்கிடையில், ஒரு நண்பர் வந்து எனக்கு ஏதாவது ஒரு வேலை வாங்கி கொடுங்களேன் என்று அருகில் நின்றார்.

"பொறுத்திருங்கள்"என்று கூறி, பெருமாள் அபிஷேகத்துக்கு அண்டாவில் நீர் நிறைக்கும் வேலையில் அவரை சேர்த்துவிட்டேன். 

புருஷ சூக்தம், ஸ்ரீ சூக்தம் போன்றவை சொல்லி ஒவ்வொரு அபிஷேகமாக நடந்து கொண்டிருக்கும் பொழுது, எனக்குள் எதோ ஒரு எண்ணம் உதித்தது! நிற்க!

அதே நேரத்தில் வந்திருந்தவர்களில், ஒரு நண்பரை காணவில்லை. தேடிப்பார்த்து இல்லை என்று உணர்ந்து அமைதியானேன். உண்மையில், எல்லோரும் மண்டபத்துக்கு பக்கத்தில் நின்று பெருமாளின் அபிஷேகத்தை பார்த்த அந்த நேரத்தில், அவர் பிரதக்ஷிண வழியில், சன்னதிக்கு பின் புறமாக அமர்ந்து ஜெபம் செய்து கொண்டிருந்தாராம். திடீரென்று, யாரோ தாமிரபரணி ஓடுகிற வழியிலிருந்து மேல் ஏறி வந்து (அரூபமாகத்தான்) சன்னதியை நோக்கி செல்வது போல் உணர்ந்தாராம். ஆம்! ஒரு மிகப் பெரிய காற்று நாம் அமர்ந்திருக்க நம்மை தழுவி நடந்து சென்றால், சென்றதும் காற்றே இன்றி இருக்கும் நிலையையும் அவர் உணர்ந்திருக்கிறார்.

அதே நேரத்தில் தான் என்னுள் அந்த எண்ணம் உதித்தது.

"அய்யன் அகத்தியப் பெருமானை அழைத்திருந்தோமே! வந்துவிட்டாரா! அபிஷேகம் வேறு தொடங்கியாகிவிட்டதே!"என்று யோசித்து பெருமாளின் விக்ரகத்தை பார்த்துக் கொண்டிருந்தேன்.  அர்ச்சகர் செய்த அபிஷேகத்தை பார்ப்பது ஆனந்தமாக இருந்தது. பால் அபிஷேகத்தை பார்த்துக் கொண்டே, ஆனந்தத்தில் விழி இமை மூட..............

பெருமாள் முன், அங்கே, அர்ச்சகருக்கு பதிலாக, அகத்தியப் பெருமான் நின்று அபிஷேகம் செய்து கொண்டிருந்தார். ஒரு நிமிடம் சிலிர்த்துப் போனேன். கண் திறந்து பார்க்க, அர்ச்சகர் தீர்க்கமான பார்வையுடன் அபிஷேகம் செய்து கொண்டிருந்தார். மறுபடியும் கண்ணை மூட, அகத்தியப் பெருமான்தான் அபிஷேகம் செய்து கொண்டிருந்தார். அடடா! சித்தன் அருளில் வந்த நம்பிமலை, கோடகநல்லூர் புனித நாட்கள் போன்றவற்றில் அகத்தியரே பெருமாளுக்கு அபிஷேகம் செய்த காட்சியை நாடியில் விவரித்த பொழுது, நமக்கும் அகத்தியப் பெருமான், பெருமாளுக்கு அபிஷேகம் செய்வதை பார்க்கிற பாக்கியம் கிடைக்குமா என்று ஏங்கியதுண்டு. அந்த ஆசையை இன்று குருநாதர் நிறைவேற்றி வைத்தார் என்று என் மனம் ஆனந்தக் கூத்தாடியது.


அபிஷேகம் நிறைவு பெற்ற பின், "எல்லோரும் வாருங்கள் உள்ளே. இனி மூலவருக்கு பூசைகள் செய்த பின், வெளியே வந்து உற்சவருக்கு பூசை"என்று கூறி உள்ளே சென்றார். வந்திருந்து, மிக அமைதியாக இருந்த அகத்தியர் அடியவர்கள், ஒவ்வொருவராக உள்ளே சன்னதி இருக்கும் இடத்தை நோக்கி சென்றனர். சிறிது நேரத்தில் அந்த ஹால் முழுவதும் நிரம்பிவிட்டது. அடியவர்கள், படி மீது ஏறி நின்று பூசை பார்த்துக் கொண்டிருந்தனர். எனக்கு உள்ளே செல்ல இடம் கிடைக்கவில்ல. நான் த்வஜ ஸ்தம்பத்தின் அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன்.

உள்ளே பூசை நடந்து அனைவரும் வெளியே வந்தனர். மூலவரை, மாலையில் சென்று பார்த்துக் கொள்ளலாம், கை நிறைய வேலை இருக்கிறது என்று தீர்மானித்து, உற்சவருக்கு நடந்த பூசையை கவனிக்கலானேன். தீபாராதனை நடந்த பொழுது, உற்சவரை பார்க்கவே முடியவில்லை. மிகப் பிரமாதமாக நடந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

"என்ன பெருமாளே! உங்கள் முகத்தை கூட பார்க்க முடியாதா எனக்கு!"என்று கேள்வி கேட்ட மறு நிமிடம், ஒரு பக்தர் விலகினார், தீபாராதனை, பெருமாள் முகத்தருகே காண்பிக்கப்பட, ஒரு நிமிட தரிசனம்.


"அது போதும் பெருமாளே! மிக்க நன்றி!"எனக்கூறிவிட்டு காத்திருந்தேன்.

பெருமாளுக்கு நிவேதனம் செய்து, வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் சடாரி வைத்து, பெருமாளின் துளசி பிரசாதம் கொடுக்க, நிவேதன பிரசாதம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வலது பக்க மண்டபத்தில் வைத்து ஒருவர் தட்டுகொடுக்க, மற்றவர்கள் பிரசாத விநியோகத்தை தொடங்கினர். மிக மிக சந்தோஷமான விஷயம் என்னவென்றால் வந்திருந்த அகத்தியர் அடியவர்கள் அமைதியாக இருந்து, அபிஷேகத்தை பார்த்து, நீண்ட வரிசையில் நிதானமாக நின்று பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டு, பின்னர் சாப்பிட்ட தட்டை கோவிலுக்கு வெளியே அதன் இடத்தில் வைத்துவிட்டு போனதுதான். பிரசாத விநியோகத்தின் கடைசியில் நின்று, வந்திருந்த அனைவருக்கும் "786"எண் பதித்த ரூபாய் நோட்டை - "பெருமாளின் பரிசு"என்று கூறி கொடுக்கிற வாய்ப்பை இறைவனும், அகத்தியப் பெருமானும் அடியேனுக்கு கொடுத்தார்கள். மேலும் சொல்லப்போனால்,
  1. இந்த வருட கோடகநல்லூர் திருவிழாவை, அகத்தியப் பெருமானே நேரில் நின்று நடத்தப் போகிறார் என்று முன்னரே தெளிவாக தெரிந்தும், அடியேனை பொறுமையாக அமைதி காக்க வைத்தார். ஒவ்வொரு எற்பாட்டையும் அவரே செய்து தந்தார்.
  2. அதில் அகத்தியர் அடியவர்கள் அனைவரும் பங்கு பெற்றார்கள் என்பது சந்தோஷமான ஒரு விஷயம்.
  3. அகமதாபாத், சென்னை, பெங்களூர், மேலும் பல இடங்களிலிருந்தும் அகத்தியர் அடியவர்களை கிளப்பி விட்டு பங்கு பெற செய்தார் என்பது இன்னொரு விஷயம். அவர்களும் சின்ன சின்ன வேலைகளை செய்து தங்கள் சேவையை பூர்த்தி செய்தனர்.
  4. மேட்டுபாளயத்தில் வசிக்கும் ஒரு அகத்தியர் அடியவர் (நாடி வாசிப்பவர்) வந்திருந்து, முதல் நாள் தனக்கு அகத்தியர் நாடியில் வந்து உத்தரவிட்டதாகவும் "உடனே, நீ கிளம்பி செல் கோடகநல்லுருக்கு"என்று கூற, அந்த ஊர் எங்கிருக்கிறது என தேடி கண்டுபிடித்து வந்து சேர்ந்தார். அவர் சார்பாக எல்லோருக்கும் "அகத்தியர், லோபாமுத்திரை"படம் ஒன்றை அனைவருக்கும் கொடுத்தார் என்பதிலிருந்து, அனைவருக்கும் அகத்தியப் பெருமான் ஒரு பரிசை வழங்கினார் என்று தான் கூறவேண்டும்.
  5. சென்னை மைலாப்பூரில் அகஸ்தியர் ஜோதிடம் பார்க்கும் ஒருவரை கிளப்பிவிட, அவர் தன் சிஷ்யர்களுடன் வந்து இறை தரிசனம் பெற்று சென்றார். அவரது நண்பர்கள், மிகுந்த அளவுக்கு பூசை பூக்களை சுத்தப்படுத்தி வைப்பதில் உதவி புரிந்தனர் என்பதை இங்கு கூறத்தான் வேண்டும்.
  6. வந்திருந்த ஒரு இளைஞர் (அகத்தியர் அடியவர்) வந்து தரிசிக்கும் அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என "லட்டு"வாங்கி வந்து, இதையும் சேர்த்துக் கொள்ளுங்களேன் என்று வேண்டினார். அதற்கென்ன கொடுங்கள் என்று கூறி பிரசாத விநியோகத்தின் கூடவே அனைவருக்கும் வழங்கப்பட்டது.
உண்மையாக கூறப் போனால், ஒவ்வொரு அகத்தியர் அடியவரும், அவரவர்களுக்கு தெரிந்த வரையில், முடிந்தவரையில் அன்றைய பூசையில் கலந்துகொண்டனர் என்பதே உண்மை. அகத்தியரே வந்து அபிஷேகத்தை நடத்திக் கொடுத்து பூசையை நிறைவு செய்து கொடுக்க, இதை விட மிகப் பெரிய பாக்கியம் என்ன வேண்டும் நமக்கு என்று தோன்றிவிட்டது என்னவோ "உண்மை".

பூசை முடிந்து, பிரசாதம் வாங்கி அனைவரும் கிளம்ப, இறைவனை நோக்கி நன்றி சொல்லி ஒன்றை வேண்டிக் கொண்டேன்.

"உன் குழந்தைகள் அனைவரும் பத்திரமாக ஊர் போய் சேரவேண்டும். இன்று நீ அருளியது இனி அவர்கள் வாழ்க்கையில் என்றும் உயர்வுக்கு வழி வகுப்பதாக இருக்கவேண்டும்!"

அனைவரும் செல்ல, கோவில் அமைதியானது. பூசாரி கோவிலை சார்த்திவிட்டு கிளம்பினார். நானும் நண்பர்களும், மாலையில் வந்து சேர்வோம் என்று கூறிய பக்தர்களுக்காக காத்திருந்து, மறுபடியும் தாமிரபரணியில் குளித்துவிட்டு, அன்றைய தினம் பிரதோஷம் ஆனதால், கோடகநல்லூர் கைலாச நாதரை தரிசனம் செய்துவிட்டு (செவ்வாய் பரிகார ஸ்தலம்), கோவிலுக்கு திரும்பி வந்தோம்.

பெருமாள் ஆஜானுபாகுவாக சிரித்தபடி நின்றிருந்தார். 25 அகத்தியர் அடியவர்கள் இருந்தனர். பெருமாளுக்கு இரவு பூசை நடந்து, நிவேதனம் (கடலை சுண்டல்) கொடுத்தனர். தேவாமிர்தமாக இருந்தது. பிறகு பள்ளியறை பூசை (பெருமாள் கோவிலில் இங்கு மட்டும் தான்) நடந்தது. எல்லோருக்கும் பள்ளியறை பால் பிரசாதமாக வழங்கினார்கள்.

அனைத்திற்கும் பெருமாளுக்கும், அகத்தியப் பெருமானுக்கும் சிரம் தாழ்ந்த நன்றியை கூறிவிட்டு, ஊர் நோக்கி வந்து சேர்ந்தோம்.

அனைத்தும் அகத்தியர் அருளால் நடந்தது. அதனால் தான் இந்த தொகுப்பிற்கு "அகத்தியர் நடத்திய திருவிழா"என்று பெயர் கொடுத்தேன்.

அனைவரும் அவர் அருள் பெற்று விட்டீர்கள். அது கூடவே இருந்து உங்களை வழி நடத்தட்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு........

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடிகளில், இதை சமர்ப்பிக்கிறேன்!

கோடகநல்லூர் சித்தன் அருள் நிறைவு பெற்றது!



சித்தன் அருள்................ தொடரும் !

சித்தன் அருள் -251- "பெருமாளும் அடியேனும்" - 28 - கலிபுருஷன் செய்த கலகம்!

$
0
0

"தங்களுடைய கணவர், இந்திரலோகத்தில் யுவராணியோடு தன்னை மறந்த நிலையிலிருக்கிறார்"என்று கருடாழ்வாரின் மனைவியிடம், கலிபுருஷனான அந்த "அதிதி"சொன்னதைக் கேட்டு, கருடாழ்வாரின் மனைவி, துடி துடித்துப் போனாள் .

தாம்பத்திய வாழ்க்கையில் தனக்கென்று ஓரிடம் கொண்டு, மற்றவர்களுக்கெல்லாம் ஓர் இலக்கணமாக வாழ்ந்துவரும் கருடாழ்வாரைப் பற்றி, கலிபுருஷன் சொன்னதால் "இருக்காது, இருக்கவே இருக்காது"என்று அவளுடைய உள்மனம் சொல்லிற்று.

ஆனால்.........

"கலியுகம் ஆரம்பித்துவிட்டது. இனி என்னென்ன நடக்குமோ?"என்று சில நாட்களுக்கு முன்பு கருடாழ்வார் தன்னிடம் சொன்னது அவளுக்கு நினைவுக்கு வந்தது!

"அப்படி சொன்னவரே இன்றைக்கு கூடா ஒழுக்கத்தில் சென்று விட்டாரே"என்று ஒரு பதட்டம் எற்படத்தான் செய்தது.

அதே சமயம்.........

அதிதியாக வந்தவர், சாமான்யமானவரல்லர். இந்திரலோகத்தில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியை பற்றி, தெள்ளத் தெளிவாக தன்னிடமே இவர் சொல்கிறார் என்றால், இவர் தேவலோகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். இல்லையேல், சித்த புருஷராக, மகரிஷியாக இருக்க வேண்டும். நேரடியாக நிஜ உருவத்தில் வர பயந்து, இப்படி மாறு வேடத்தில் அதிதியாக வந்திருப்பார் என்று பல்வேறு கற்பனையில் ஆழ்ந்தாள், கருடாழ்வாரின் மனைவி.

இவர் மட்டும் தப்பித்தவறி பொய் சொல்லியிருந்தால், பாம்பின் உடலை தன் கூறிய நகத்தால் கருடன் கீறிக் கொன்று விடுவதுபோல், இவர் கருடாழ்வாரால் பின்பு கொல்லப்படலாம். அதே சமயத்தில் இவர் சொல்வது ஒருவேளை உண்மையாக இருந்து விட்டால்? என்று மீண்டும் குழப்பமடைந்தாள் அவள்.

"தாயே"என்று கலிபுருஷனான அந்த வயதான அதிதி அழைத்தார்.

"சொல்லுங்கள் பெரியவரே"

"உண்ட வீட்டிற்கு துன்பம் விளைவிக்கும் செயலைச் செய்யமாட்டேன். நான் சொன்னது பொய்யாக இருந்தால், என் உயிர் தங்கள் கால் நகங்களாலேயே சின்னா பின்னமாகச் சிதைந்து கொல்லப்படட்டும்"என்று அழுத்தமாகச் சொன்னார்.

"பெரியவரே! உங்களை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை. தாங்கள் இந்த வீட்டிற்குள் நுழைந்ததும் ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்று மட்டும் என் உள்மனம் சொல்கிறது!"என்றாள்.

"உண்மைதானே!"

"தாங்கள், அதிதி போல் முதலில் நடந்து கொள்ளவில்லை. தங்களுடைய பேச்சும், செயலும் வித்யாசமாக இருந்தது. எல்லோருக்கும் படியளக்கும் அந்த வேங்கடவனைப் பற்றி ஏதேதோ கூறினீர்கள்."

"என்ன கூறினேன்?"

"இந்த உலகை எல்லாம் காப்பாற்றக் கூடியவர் பெருமாள். அப்படிப்பட்ட பெருமாள்தான் இன்றைக்கு வேங்கடவனாக அருள் பாலித்து வருகிறார். அந்த வேங்கடவனுக்கு என் கணவர், தினம் தினம் சேவை செய்கிறார். அவரைத் தூக்கி சுமக்கிறார். படியளக்கும் பெருமாளுக்கு தாசானு தாசனாக இருந்து வருகிறார். அப்படிப்பட்ட சர்வலோக நாயகனுக்கு, தன்னை காப்பாற்றிக் கொள்ளத் தெரியாதா? என் கணவரா வேங்கடவனைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்? இந்த வார்த்தையை அதிதியான தாங்கள் சொல்வது எந்த விதத்தில் நியாயமாகும்?"என்று படபடவென்று பொரிந்து தள்ளினாள், கருடாழ்வாரின் மனைவி.

பெருமாள் மீது கொண்ட அளவற்ற பக்தியை கண்டு ஒரு நாழிகை மெய்மறந்து போன கலிபுருஷனான அந்த அதிதி, பின்னர் தன்னை சுதாரித்துக் கொண்டு, "அம்மணி! தாங்கள் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என எண்ணுகிறேன். என் காதில் வீழ்ந்ததைச் சொன்னேன். மற்றபடி தாங்கள் இதனை ஏற்பதும், எற்காமலிருப்பதும் தங்கள் விருப்பம்."என்றான் கலிபுருஷன் மிகவும் பவ்யமாக.

"அது சரி! தாங்களோ இங்கு அதிதியாக வந்தவர். அப்படியிருக்க எப்படி இந்திரலோக அந்தரங்க விஷயங்களைப் பற்றித் தெரியும்? இந்த மாதிரி செய்திகள் இறைவனுக்கும், தேவலோகத்திற்கும், முற்றும் துறந்த பூலோக முனிவர்களுக்கும் மட்டும்தான் தெரியும். அப்படியென்றால் தாங்கள் யார்?"என்றாள் சற்று கடுமையாக.

"தாயே! தங்களோடு எதிர்வாதம் செய்ய இந்த அடியேனால் முடியாது. அதை யானும், ஒரு போதும் விரும்பவில்லை. உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யவும் மாட்டேன்"என்றான் கலிபுருஷன்.

"பின் எதற்க்காக என் கணவரைப் பற்றி அவதூறாகக் கூறினீர்கள்?"

"தங்கள் இல்வாழ்க்கை நல்லபடியாக அமையவேண்டும் என்பது ஒன்று. இன்னொன்று, தங்களின் கணவர் இந்திர லோகத்தில் நான்கு பேருக்கு முன்பு கேவலப் படக்கூடாது என்பதற்காகச் சொன்னேன். அவ்வளவுதான்"என்று மிகவும் நல்லவன் போன்று பேசினான், கலிபுருஷன்.

"தங்களது நல்லெண்ணத்திற்கு நன்றி!"என்று அதிதிக்கு விடை கொடுத்தாள் கருடாழ்வாரின் மனைவி.

"தாயே! தங்களுக்கு சகல விதமான மங்களங்களும் உண்டாகட்டும். ஒரே ஒரு விஷயம். இந்த அதிதி சொல்வது பொய்யல்ல. தங்கள் வீட்டிற்கு வரும் கருடாழ்வார் நெற்றியில் செந்தூரப் பொட்டிருக்கும். ஜவ்வாது மணம் உடல் முழவதும் காணப்படும். இது எப்படி வந்தது? என்று மட்டும் கேளுங்கள். அவர் பதில் சொல்லத் திணறுவார். பிறகுதான் நான் சொன்னது உண்மை என்று தெரியும்"என்றவன் விடுவிடுவென்று வெளியேறினான்.

"அடடா! இந்த அதிதி யார் என்று இதுவரை சொல்லவே இல்லையே"என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள் கருடாழ்வாரின் மனைவி.

சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த கருடாழ்வார் தம்பதியிடையே குடும்பத்தைச் சந்தேகப்படும்படி செய்து குழப்பத்தை உண்டு பண்ணிய சந்தோஷத்துடன் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் கலிபுருஷன்.

கருடாழ்வார் தன் வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்தார்.

சித்தன் அருள்................ தொடரும்!

சித்தன் அருள் - 252 - திரிகூட மலை குற்றாலம் !

$
0
0
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

குற்றாலம் அகத்தியப் பெருமானின் அருள் பெற்ற இடங்களில் ஒன்று. ஒரு அகத்தியர் அடியவர் அனுப்பித் தந்த ஒரு புகைப்படத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!

திரிகூட மலை, குற்றாலம் - நேர் பார்வை!


திரிகூட மலை, குற்றாலம் - சித்தர் பார்வை!

 
அகத்தியர் அடியவருக்கு நன்றி!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

சித்தன் அருள் - அகத்தியரின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

$
0
0

வணக்கம்  அடியவர்களே!

அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் "அகத்தியப் பெருமானின் சித்தன் அருளின்"தீபாவளி நல் வாழ்த்துக்கள்! எல்லா நலமும் பெற்று இனிதே வாழ்க! இறையருள் துணை நிற்கட்டும்!

நாடி வாசிக்க! TO READ NAADI (PALM LEAF) !

$
0
0

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

"அகத்தியப் பெருமானின் சித்தன் அருள்"என்கிற இந்த வலைப்பூவை வாசிக்கிற உங்களுக்கு, நாமும் எங்கேனும் போய் நாடி வாசித்து நம் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளலாம் என்று தோன்றுவது இயல்பு. தவறில்லை.

நீங்கள் அனைவரும் அவர் அருள் பெற்று வாழ வேண்டும் என்கிற எண்ணத்தில் கீழே ஒரு சில விலாசத்தை, தொடர்பு எண்ணை தருகிறேன். எங்கு செல்வது என்பது உங்களின் தனி விருப்பம் தான்.

அங்கு சென்றதும் நடக்கின்ற காரிய காரணங்களுக்கு, இந்த வலைப்பூவோ, நானோ பொறுப்பு ஏற்க முடியாது.

கல்லார் அகத்தியர் ஆஸ்ரமம்:-

Sri.Thangarasan Swamigal,
Sri Agathiyar Gnana Peedam,
2/464, Agathiyar Nagar,
Thoorippalam,
Kallar - 641 305,
Mettupalayam,
Coimbatore,
Tamilnadu,
India
Cell No:Swami - 9842027383
Maathaji - 9842550987

அகத்தியர் நந்தி பிருகு நாடி:-

Sri.Selvam
Address: 51/8, Manickam Nagar,
Ground floor, 4th Cross Street,
Behind Ajax Bus Terminus,
Thiruvottriyur, Chennai-600019.
Cell No:9952026908 / 9976048004
Email:bjnaadi@gmail.com

அகத்தியர் ஜீவ நாடி:-

Sri.Senthil Kumar
Mettupalayam
Cell No:09585018295

எல்லா நலமும் பெற்று அவர் அருளால் வாழ்க!

சித்தன் அருள் - 253 - சுப்ரமண்ய த்ரிசதி - அடியவர்களுக்கு அகத்தியரின் பரிசு!

$
0
0

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

தீபாவளியை அகத்தியரின் அருளால் இனிதே கொண்டாடியிருப்பீர்கள். நானும் அவ்வாறே இனிதாக கொண்டாடியதில், இந்த வார "சித்தன் அருள் - பெருமாளும் அடியேனும்"தொகுப்பை தட்டச்சு செய்து தயாராக வைக்க மறந்துவிட்டேன். ஆதலால், இந்த வார "பெருமாளும் அடியேனும்"தொடருக்கு ஒரு வார இடைவேளை விட்டுவிட்டு, அடுத்த வாரம் தரலாம் என்று நினைத்தேன்!

திடீரென அகத்தியரின் குரு சுப்ரமண்யரின் "மகா சஷ்டி"ஞாபகம் வர, எத்தனையோ அன்பர்கள் என்னென்னவோ விஷயங்களுக்காக விரதமிருப்பார்களே! அவர்கள் எண்ணம் ஈடேற முருகரின் அருள் எப்பொழுதும் அவர்களை சூழ்ந்திருக்க ஏதேனும் செய்ய வேண்டுமே என்ற எண்ணம் தோன்றியது.

ஆம்! "சத்ரு சம்ஹார யாகம்"முதன் முதலில் பஞ்சேஷ்டியில் அகத்தியரால், முருகரின் உத்தரவால், அம்பாளின் அருகாமையில், அகத்தியப் பெருமானால் நடத்தப்பட்டது. அதில் எத்தனையோ விதமான மந்திரங்கள் கூறப்பட்டாலும், முதன்மை வகித்து, எண்ணம் ஈடேற வைத்தது "சுப்ரமண்ய மூல மந்திர த்ரிசதி"எனப்படுகிற சுலோகம்தான்.

அகத்தியப் பெருமானிடம் வேண்டிக் கொண்டு அந்த ஸ்லோகத்தை தேடத்தொடங்கினேன். விரைவில் அது கைவல்யமானது. அந்த ஸ்லோகத்தை, உங்களுக்கு, "மகா சஷ்டிக்கு"முன்பாக அகத்தியர் உங்கள் அனைவருக்கும் அளித்த பரிசாக கீழே உள்ள தொடுப்பில் தருகிறேன். பெற்றுக் கொள்ளுங்கள். இந்த மந்திரத்தை, ஜெபிப்பதால், அல்லது கேட்பதால் அனைத்து பிரச்சினைகளும் நீங்கும். எல்லாம் ஜெயமாகும்.

உங்கள் இல்லங்களில், தினமும் இது ஒலிக்கட்டும், இறை அருள், அகத்தியப் பெருமான் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும் என்று வேண்டிக் கொண்டு ...........

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

சித்தன் அருள் - 254 - சுப்ரமண்ய சஹஸ்ரநாமம் !

$
0
0

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!


மகா சஷ்டியை நோக்கி சென்று கொண்டிருக்கும் இரண்டாவது நாளான இன்று முருகரை பற்றி சிவபெருமான் பார்வதி தேவியிடம் உரைத்ததை உணர்வோம்.

  1. நம் குமாரனே எல்லா தேவ வடிவும் (சமஷ்டி தேவதை). எல்லா உலக வடிவும் (சமஷ்டி பிரபஞ்சமும்), எல்லா உயிர்களின் வடிவமும் (விராட் ரூபி) ஆக விளங்குகிறான். அதனால் அவனே சாக்ஷாத்கார பிரம்மமாவான்!
  2. ருத்திர கோடிகள் அளவற்றவையில் இவனே மஹா சம்ஹார காரண ருத்திரன்.
  3. இவனே ஸ்ரீகண்ட ருத்திரக் கடவுளின் சக்தியான மஹா விஷ்ணு.
  4.  மஹா விஷ்ணுவின் நான்கு மூர்த்தங்களில், இவன் வாசுதேவ மூர்த்தி,
  5. எல்லா பிரஜாபதிகளுக்கும் இவன் பிரமன்.
  6. ஒளியுள்ள பொருட்களில் இவன் அக்னி தேவன்.
  7. திக் பாலகர்களில் இவன் "ஈசானன்".
  8. அக்னியில் "சிவாக்னி"
  9. அக்ஷரங்களில் பஞ்சாக்ஷரம்.
  10. வித்யைகளில் பர வித்யை.
  11. யோகங்களில் அஷ்டாங்க யோகம்.
  12. ஞானங்களில் இவன் சிவ ஞானம்.

ஆண்டியாகப் போன முருகரிடம் சிவபெருமான் அன்புடன் கூறியதாவது.....

"மைந்தா! நானும், சக்தியும் நீயன்றோ! தத்வமசி வாக்கியப் பொருள் நீ என்ற படி, என்னுடைய ஐந்து முகங்களும், தேவியின் ஒரு முகமும் சேர்த்து உனக்கு ஆறு முகங்களாயிற்று! என்னைக் குறித்து செய்யப்படும் வழிபாடும், நின் அன்னையைக் குறித்து செய்யப்படும் பூஜையும் உனக்கேயாகும். உன்னை பூஜித்தவர் எங்கள் இருவரையும் பூஜித்தவராகிறார்."

அகத்தியப் பெருமான் தரும் பரிசாக, உங்களுக்கு "சுப்ரமண்ய சஹஸ்ரநாமாவளி"என்கிற ஒலிநாடாவை கீழே உள்ள தொடுப்பில், இன்று தருகிறேன்.

எல்லோரும் இன்புற்று வாழ வேண்டிக் கொண்டு........ 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

சுப்ரமண்ய சஹஸ்ரநாமம் @ Mediafire 

சித்தன் அருள் - 255 - உபதேச தத்துவம்!

$
0
0

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

ஓதியப்பரின் மகா சஷ்டியை நோக்கி சென்று கொண்டிருக்கும் அடியவர்கள் அனைவருக்காகவும், குருநாதர் அகத்தியப் பெருமான் அவர்கள் காட்டித்தந்த நல்ல விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

முருகன், தந்தை சிவபெருமானுக்கு உபதேசித்ததன் தத்துவம் என்ன?

சிவபெருமான் முருகனிடம், "அப்பா முருகா! உலகிலுள்ள ஜீவராசிகள் எல்லாம் என் ஸ்வரூபமே. ஆகவே, நீ எனக்கு ஞான உபதேசம் செய்தால் உலகிலுள்ள ஜீவராசிகள் எல்லாம் கேட்டு உய்யும்"என்றார். அதன்படியே முருகன் சிவம் மூலம் ஜீவராசிகளுக்கு உபதேசம் செய்து கொண்டே இருக்கிறான். இதனால் சிவனின் உள்ளம் குளிர, ஜீவராசிகளின் உள்ளமும் குளிர்ந்ததாம்.

"சிவனார் மனம் குளிர உபதேச மந்திரம் இரு 
செவி மீதிலும் பகர் செய் குருநாதா" 

என்று பெரியவர்கள் எப்போதும் வேண்டிக் கொள்வார்கள்.

இந்த உபதேசத்தை ஜீவராசிகள் மனம் கொடுத்துக் கேட்டால் தானே, பகவான் உருவாக்கிய நந்தவனத்தில் ஆனந்தமாக விளையாடலாம்!

பகவான் விளையாடும் நிலமே நந்தவனம். தன்னுடன் விளையாடுவதற்காக பல ஜீவராசிகளைப் படைத்துள்ளான். இந்த ஜீவா ராசிகளுக்கு அவன் கொடுத்த "சுயேச்சை" (சுதந்திரம்) காரணமாக. இவைகள் அவன் உபதேசத்தை மறந்து, "நான்"என்ற பிசாசின் வயப்பட்டு அல்லல் படுகின்றன. இந்த சுயேச்சையை பகவானிடம் "இச்சையாக"மாற்றிவிட்டால் என்றும் பேரின்பமே.

ஐந்து பூதங்களிலும் மேலான அதிகன் முருகன். அதனால் அருணகிரிநாதர் அவரை "அதிகா"என்கிறார். "அனகா"என்றால் பாவமற்றவன். ஒருவன் மற்றொருவனை வைதால் (திட்டினால்), வையப்பட்டவனுடைய பாவத்தை வைதவன் வாங்கிக் கொள்கிறான். புகழ்ந்தால் புகழப்பட்டவனுடைய புண்ணியத்தை பங்கிட்டுக் கொள்கிறான். (இங்கே அகத்தியப் பெருமான் அடிக்கடி கூறுவது நினைவுக்கு வருகிறது. குருநாதர் சொல்வது இதுதான். பிறரை புகழ்வதில் எப்பொழுதும் தயங்காதீர்கள் என்கிறார். அதனால் பிறருடைய மனதை குளிர்விப்பதினால், நமக்கும் புண்ணியம் சேருகிறது என்று அர்த்தம்.]

சுப்ரமண்ய மூல மந்த்ர ஸ்தவம் என்கிற ஒலி நாடா உங்களுக்காக கீழே தரப்பட்டுள்ளது. எடுத்துக் கொண்டு அவர் அருள் பெற்று வாழ்க!


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

சித்தன் அருள் - 256 - சுப்ரமண்யம் சண்முகம்!

$
0
0
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

"மகா சஷ்டியின்"நான்காவது தொகுப்பாக ஒரு சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன்.
  1. நம் புருவ மத்தியில் ஆறு பட்டையாய் உருட்ச்சியுள்ள ஒரு மணி பிரகாசம் பொருந்தி இருக்கிறது. இந்த ஜோதி மணியை "சண்முகம்"என்பர் பெரியோர்.
  2. இதன்றி, நம் மூலாதாரத்திற்கு மேல் மூன்றிடம் தாண்டி அநாகதமாகிய இருதய ஸ்தானத்தில் இடது புறத்தில் ஆறு தலையுடைய ஒரு நாடி இருக்கிறது. இதை "சுப்ரமண்யம்"என்பார்கள்.
  3. இந்த தேகத்திலுள்ள ஆறறிவும், ஆறு ஆதாரங்களிலும் உள்ள ஆறு பிரகாசத்தையும் "சண்முகம்"என்பார்கள்.
  4. நம் மனம் ஒரு குகை போன்றது. குகை எப்போதும் இருந்திருக்கும். அந்த இருட்டில் ஒரு ஜோதியாக முருகன் விளங்குகிறான். அதனாலேயே அவனுக்கு "குகன்"என்ற பெயர் ஏற்பட்டது. "குஹ்யம்"என்ற சொல்லுக்கு "மிக ரகசியமானது"என்று பொருள். சாமானியர்களால் அறிய முடியாக ரகசியமாக அவன் இருப்பதால் "குகன்"என்ற பெயர் பெற்றான் என்றும் கூறுவார்.
  5. வள்ளி, தேவசேனா இருவரின் தத்துவத்தை; நம் பக்தி உண்மையாய் இருக்க, ஞானத்தை (இறைவனை) தேடி சென்றால் இறை தரிசனம் கிட்டும் என்பதை தேவசேனாவை மணந்தது வழியாகவும், எளிய உண்மை பக்தியுடன் இருந்தால் அவனே நம்மை தேடி வந்து அருள் புரிவான் என்பதற்கு வள்ளியை தேடி வந்து மணம்புரிந்த நிகழ்ச்சியையும் கூறுகிறார்கள்.
  6. தேவர்கள் வேண்டுதலின்படி, பரமேஸ்வரன், தனக்குள்ள ஐந்து முகத்துடன், அம்பிகை முகத்தையும் கொண்டு, ஆறுமுகமாக அவதரித்தார்.  
  7. மண்ணெல்லாம் ஒன்றாய் சேர்ந்து திரண்டு விண்ணில் சேரவேண்டுமென்று மேலே எழும்பியது மலை ஆனது. விண்ணாகிய தெய்வீக ஜோதியை காணவேண்டும் என்கிற உணர்ச்சியை எழுப்புவதே "மலையின்"தத்துவம். அதன் உச்சியில் இருக்கிற "ஞானமே முருகன்". அதனால் தான் குன்றிருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம் என்றார்கள்.
  8. தேகத்தை சுத்தமாகச் செய்துவிட்டால், அதிலுள்ள ஆவியை தன் குடியாக்கிக் கொள்கிறான் முருகன். அதுவே திருவாவினன்குடி தத்துவம்.
  9. முருகா என்று வாயினால் மட்டும் சொன்னால் போதாது. அந்த நாமம் ரத்தாசயத்துடன் கலக்க வேண்டும். இப்படி செய்தால், நம் வாயிலிருந்து வரும் வாக்கே "சத்திய வாக்காகி"விடும்.
"சரவணபவ"என்கிற மந்திரத்துக்கு முன் 
  • "ஓம்"சேர்த்து ஜெபிப்பவர்கள் தானாகவே நாடிவரும் முக்தியை பெற்றுக் கொள்கின்றனர்.
  • "ஓம் ஹ்ரீம்"சேர்த்து ஜெபிப்பவர்கள் அறியாமை நீங்கப் பெறுவார்கள்.
  • "ஓம் க்லீம்"சேர்த்து ஜெபிப்பவர்கள் மன்மதனைப் போல விளங்குவார்கள்.
  • "ஓம் ஐம்"சேர்த்து ஜெபிப்பவர்கள் கவிதை இயற்றும் புலவர்களாவார்கள்.
  • "ஓம் ஸ்ரீம்"சேர்த்து ஜெபிப்பவர்கள் தாபங்கள் தீர்த்து இன்பக்கடலில் திளைப்பார்கள்.
உங்கள் சேமிப்புக்காக "சுப்ரமண்ய புஜங்கம்"என்கிற ஒலிநாடாவை கீழே உள்ள தொடுப்பில் தருகிறேன்.


எல்லா நலமும் பெற்று இந்த மகா சஷ்டி முதல் சுப்பிரமணியர் அகத்தியப் பெருமான் அருளால் நீங்கள் அனைவரும் இனிதே வாழ்க! 

சித்தன் அருள் - 257 - முருகரின் தத்துவம்!

$
0
0

​வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

மகா சஷ்டி நோக்கிய பயணத்தின் 5வது நாளான இன்று அகத்தியர் அருளிய சில தகவல்களை பார்ப்போம்.

​இருதயம் என்பது ஒரு குளம். அதுவே "சரவணப் பொய்கை". இக்குளம் நாடிகளாகிய வாய்க்கால்கள் மூலமாகவே ரத்தத்தை உடல் முழுவதும் பரப்புகிறது. இந்த குளத்தின் நீரே ரத்தம். ஆசாபாசங்களும், ஆணவாதிகளும் இல்லாமல் பார்த்துக் கொண்டால் இக்குளம் தூய்மையாகவே இருக்கும். ஆசாபாசங்களே இக்குளத்தில் பாசியாகப் படர்ந்துள்ளது. இவைகளை நீக்கி தெய்வ பக்தியை இதயத்தில் ஏற்றிவிட்டால் அதுவே பேரின்ப வாழ்வு. அந்த இருதய சரவணப் பொய்கையில் விளையாடுபவன் முருகன்.

இக்குளத்தை சுத்தம் செய்து நல்ல எண்ணங்கள் மூலம் தன்னை நினைப்பவனை "தன்"வண்ணமாக்குவது தெய்வத்தின் இயல்பு. நம் நினைவு ரத்தத்தையே முதலில் சேருகிறது. நல்ல நினைவுள்ளவர்கள் ஆரோக்கியத்துடன் வாழ முடியும்.

இதையே ஒரு சித்தர் 
குறவன் குடிசை புகுந்தாண்டி
கோமாட்டி எச்சில் உமிழ்ந்தாண்டி 
என்கிறார்.

மானிட சரீரமே குறவன் குடிசை. குறப்பெண்ணை கைபிடித்த குறவனான முருகனை அழைத்தால் அவன் அதில் குடியேறுவான். ஆசாபாசங்களை, ஆணவத்தை அறுத்த உடல், நாமத்தை சொல்லும் நாவில் ஊரும் எச்சில் கங்கயாகிவிடுகிறது. அத்தகைய அன்பர்கள் நாவில் அவன் விளையாடுகிறான். நாமமே முருகனின் சரீரம். சப்தமே அவன் சரீரமானபடியால் நாமத்தை சொல்லும்பொழுது சப்தத்துடன் அவனை அனுபவிக்கிறோம்.

திருவடி என்பது நாதப்பிரம்மம். (நடராஜரின் இடது கை ஆள்காட்டி விரல் அவர் திருவடியை காட்டுவது, இந்த சூட்ச்சுமம் தான்). சப்த பிரம்மத்தால் (நாம ஜபம்) உலகினை கட்டி தன்னகத்தே வைத்தால் பிரம்மஞானம் உணர முடியும்.

தன் அன்பை எங்கு கொண்டுபோய் வைப்பதென்று முருகன் பதினான்கு உலகிலும் சுற்றிப் பார்த்தானாம். தொண்டர்கள் இருதயம்தான் தக்க இடம் என்று தீர்மானித்து நமது இருதயத்தில் புகுந்தானாம்.

"நான்""எனது"என்கிற உணர்ச்சிகளை ஆண்டவனுடைய "நானாக""உனதாக"மாற்றிவிட்டால் அது உலகம் முழுவதும் பரந்த "நான்""உங்களுடையது"ஆக ஆகிவிடுகிறது.
ஒரு நிமிடம் கண்ணை மூடி முருகனை நினைத்து அகக்கண் திறக்கப் பெற்றால் அவர்களே மிகுந்த புண்ணியவான்கள்.

முருகன் நம் இருதயத்திலிருந்து எப்போதும் பிரம்ம ஞானம் பேசிக்கொண்டு இருக்கிறான். ஆனால், ஐவர் (பஞ்சேந்த்ரியங்கள்) அவன் பேச்சை கேட்க விடாமல் தாங்கள் பேசிக் கொண்டே இருக்கின்றனர். "முருகா"என்னும் சப்தத்தினால் அந்த ஐவரையும் (பஞ்சேந்த்ரியங்கள்) ஒடுக்கவேண்டும்.

ஜீவர்களிடமுள்ள கருணை காரணமாக தனக்கு நெற்றிக் கண் வேண்டாம் என்று தீர்மானித்துவிட்டாரம் முருகர்.

6 முகம், 12 ஆயுதம் ஏந்திய கைகள் :-

இவருடைய ஆறு முகங்கள் முற்றறிவு, அளவிலின்பம், வரம்பில் ஆற்றல் உடைமை, தன்வயமுடைமை, பேரருளுடைமை, இயற்கை அறிவு  என்ற ஆறு குணங்களாகும். அவர் திருமேனி அருள் உரு.

வேலாயுதம் தவிர மற்ற பதினோரு ஆயுதங்கள் ஏகாதச ருத்திரர்கள். வேல் ஞான உருவம். சேவல் கொடி நாத தத்துவம், மயில் விந்து தத்துவம். வள்ளி, தெய்வயானை இச்சா சக்தி, க்ரியா சக்தி தத்துவம்.

தேவசேனா, பக்தர்கள் பகவானை தேடி செல்லும் தத்துவம். மர்க்கட நியாயம். அதாவது குரங்குக் குட்டி தன் தாயின் வயிற்றை கெட்டியாக கட்டிக் கொள்வது.

வள்ளி நாயகி,, பகவானே பக்தர்களை நாடி வரும் தத்துவம். மார்ஜால நியாயம். தாய் பூனை தன் குட்டிகளை கவ்விச் சென்று பாதுகாப்பது போல.

வேல் இருப்பது ஆன்மாக்களுக்கு ஞானம் தர. அந்த ஞான அறிவை, இச்சையையும், கிரியையும் ஒழித்தால் அடையலாம்.

அகத்தியர் அடியவர்களே! அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி எல்லா அருளும் பெற்று வாழ்ந்திட பிரார்த்திக்கிறேன்!

உங்கள் சேமிப்பிற்காக "சுப்ரமண்ய கராவலம்பம்"என்கிற ஸ்லோகம் கீழே உள்ள தொடுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. எடுத்துக் கொள்ளவும்.


சித்தன் அருள் - 258 - சுவாமிமலை !

$
0
0

வணக்கம் அடியவர்களே!

அகத்தியர் அருளால், மகா சஷ்டியை நோக்கி நடந்து வந்த உங்களுக்கு அவர் அருளிய பல விஷயங்களை இதுவரை தெரிவித்துவிட்டேன்.

"மகாசஷ்டி"யான இன்று சுவாமிமலையில் அமர்ந்த முருகப் பெருமானின், திருத்தலத்தின் பெருமைகளை அவர் உரைப்பதை பார்ப்போம்.
  1.  பிரம்மதேவன் முதலான தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள் ஆகியோர் முருகன் வாழும் சுவாமிமலையில் எப்போதும் வசிக்க ஆசைப்படுகின்றனர்.
  2. குஹன் ஈஸ்வரனுக்கு பிரணவத்தை உபதேசித்த நிகழ்வை பூமியில் மனிதருக்கு உணர்த்த உருவாக்கப் பட்ட புண்ணிய ஸ்தலம். ஆதலால், இதை கைலையை விட உயர்ந்த ஸ்தானம் என்று பெரியோர் கூறுவார். 
  3. முருகனுடைய மூர்த்தி இங்கு ஆகாச கங்கையாக விளங்குகிறது.
  4. இம்மலையில் உள்ள அறுபது படிகளும், வருஷ தேவதைகள்.
  5. ஆறு ருதுக்களும் அடிவார மலைகள், கோபுரங்கள் சப்த மாத்ரு கணங்கள். கோவில் வாசற்படிகள் தேவ மகளிர்.
  6. மலை ஏறும் பொழுது முருகன் நினைவுடன் ஒவ்வொரு படிகளுக்குரிய வருஷ தேவதைகளுக்கு தேங்காய் நிவேதனம் செய்து கற்பூர ஆராதனையுடன் வழிபடவேண்டும்.
  7. முருகன் இருக்கும் விமானத்துக்கு "அசலானந்தம்"என்று பெயர். விமானத்திலுள்ள ஷண்முகனை வழிபடுபவர் மறுபடியும் இவ்வுலகில் பிறக்கமாட்டார்கள்.
  8. முதலில் சுவாமிநாதனை தரிசித்த பின்னரே அடிவாரத்தில் உள்ள பரமேஸ்வரனை தரிசிக்க வேண்டும்.
  9. கார்த்திகை மாதம் கிருத்திகை நக்ஷத்திரத்தில் முருகனை வழிபடுபவன், உலகின் தலைவனாக விளங்குவான்.
  10. ஸ்ரீ சுவாமிநாதனுக்கு அபிஷேகம் செய்கிறவன் சகல சம்பத்துக்களும் பெற்று வாழ்வான்.
  11. அங்கப்ரதக்ஷிணம் செய்பவன் கோரிய பொருளை பெறுவான்.
  12. சித்திரை, வைகாசி, தை மாத பௌர்ணமிகளில் சுவாமிமலையில் பிரதட்சிணம் செய்தால் பிரம்மஹத்தி முதலான தோஷங்களிலிருந்து விடுபடுவான்.
  13. பூச நட்சத்திரத்தில் சுவாமிநாதனை வழிபட்டு, பால், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தானம் ஆகியவைகளினால் அபிஷேகம் செய்தால், எல்லா விருப்பங்களும் நிறைவேறும். இது சத்தியம்.
  14. தை பூச நட்சத்திரத்தில் முருகனை வழிபாட்டு பிரம்மா முதலிய தேவர்கள் தாங்கள் கோரிய பலனைப் பெறுகிறார்கள்.
  15. எனவே, தை மாத பூச நட்சத்திரத்தில் யார் ஒருவர் சுவாமிநாதனை தரிசித்து அங்கப்ரதக்ஷிணம் செய்கின்றார்களோ, அவர்களுடைய முன்னோர்கள் மூன்று கோடி தலைமுறையினர் கரை ஏறுகின்றனர். முறைப்படி படி ஏற முடியாவிட்டால் முதல் படிக்கட்டுக்கும், கடைசிப் படிக்கட்டுக்கும் பூசை செய்துவிட்டு படி எறவேண்டும்.
  16. சண்டிகை முதலான தேவதைகள் மலையைச் சுற்றிலும் இருக்கிறார்கள். அவர்களை வணங்கிய பின்னரே மலை ஏறவேண்டும்.
  17. தைப் பூச நட்சத்திரத்தில் சுவாமிமலைக்குப் போகிறேன் என்று சொன்னாலே, முருகனுடைய அருள் கிடைத்துவிடும். அஸ்வமேத யாகப் பலன் கிடைக்கும்.
  18. பூச நட்சத்திரத்தில் சுவாமிமலைக்குப் புறப்படுகிறவன் குகனாகவே ஆகிவிடுகிறான்.
  19. பூச நட்சத்திரத்தில் சுவாமிநாதனை தரிசிப்பதற்கு முன்பாக தர்மம் செய்தால் அவன் குபேர சம்பத்தைப் பெறுவான்.
  20. மௌனத்துடன் சென்று தரிசனம் செய்தால் தேவர்களின் அதிபதியாவான்.
  21. அங்குள்ள குமாரதீர்த்தத்தில் நீராடினால் வம்சம் சிறப்புற்று விளங்கும்.
  22. குமார தீர்த்தத்தில் மண் எடுத்து படிக்கட்டுகள் கட்டி திருப்பணிகள் செய்பவன் வம்சம் சிறந்து விளங்கும்.
  23. ஸ்ரீ சுவாமிநாதனை வணங்கினாலோ, சன்னதியில் தீபம் ஏற்றி வைத்தாலோ, பில்வ தளங்களால் அர்ச்சனை செய்தாலோ, அவன் தெய்வாம்சம் பொருந்தியவனாகிறான்.
  24. பால் காவடியில் எல்லா தேவர்களும் வசிக்கின்றனர்.
  25. வேலைக் கையில் தாங்கிய குமாரனுடைய கோவில் விமானத்தை தூர நின்று தரிசித்தாலே எல்லா விருப்பங்களும் நிறைவேறும்.
குருநாதர்கள் ஓதியப்பர், அகத்தியப் பெருமான் காட்டிய அருளால், இந்த வருட மகா சஷ்டியின் பயணத்தை இனிதே நிறைவு செய்வோம்.

உங்கள் சேமிப்புக்காக "சுப்ரமண்ய மங்களாஷ்டகம்"ஸ்லோகம் கீழே உள்ள தொடுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.


அகத்தியர் அடியவர்கள் அனைவரும் இறை அருள் பெற்று, அகத்தியர் அருள், வழிநடத்தல் பெற்று வாழ வேண்டிக் கொள்கிறேன்.

இந்த சுப்ரமண்யரின் தொடர் இத்துடன் நிறைவு பெற்றது.

சித்தன் அருள் - 259 - "பெருமாளும் அடியேனும்" - 29 - கருடாழ்வார் மனைவியை விட்டு விலகல்!

$
0
0

கருடாழ்வாருக்கும், அவர் மனைவிக்கும் சண்டை நடக்கும். இருவரும் அந்த வேங்கடவனிடம் சென்று முறையிடுவார்கள். தன்னிடம் பணிபுரியும் ​கருடாழ்வார் தவறு செய்ததால் பெருமாள் கருடாழ்வாரை நீக்கிவிடுவார். இதனால் கருடாழ்வார் வேங்கடவனுக்கு உதவி செய்ய முன் வரமாட்டார். வேங்கடவனும் கருடாழ்வார் விலகியதால் தனியே துன்புறுவர். வேறு யாரும் "கருடன்"இருக்கும் அந்தப் பதவிக்கு முன்வர மாட்டார்கள். வேங்கடவன் பாடு படு திண்டாட்டமாக இருக்கும் என்று பலவிதமாக கற்பனையில் மூழ்கியிருந்தான் கலிபுருஷன்.

விஷம் எங்கு பாய்ந்தாலும் அதன் பாதிப்பு ஓரளவு எல்லோருக்கும் இருக்கத்தான் செய்யும். இதில் கருடாழ்வாரும் தப்பவில்லை. மாட்டிக் கொண்டார்.

வெளியில் சென்றுவிட்டு வந்ததும் வராததுமாக வாசலில் வழிமறித்து நின்றாள் கருடாழ்வாரின் மனைவி. இதை சற்றும் எதிர்பாராத கருடாழ்வார் அதிர்ச்சி அடைந்தார்.

"உண்மையைச் சொல்லுங்கள். இப்போது எங்கிருந்து வருகிறீர்கள்?"என்று கோபத்துடன் கேட்டாள்.

"ஏன்? இந்திரலோகத்திலிருந்து"என்று நிதானமாகச் சொன்னார் கருடாழ்வார்.

"இல்லை. இந்திரலோகத்து அந்தப்புரத்திலிருந்து என்று சொல்லுங்கள்"என்றாள் அவர் மனைவி.

"ஆமாம்!"என்றார்.

"உங்களுக்கு அங்கு என்ன வேலை?"என்றாள்.

"இதென்ன கேள்வி? வழக்கம்போல் பெருமாளைத் தரிசனம் செய்து அவருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்து அந்தப்புரத்திற்கு அனுப்பி விட்டு வருகிறேன். இன்று அவருக்குப் பிறந்தநாள். எனவே அவருக்கு அலங்காரம் செய்யச் சிறிது நாழிகை ஆகிவிட்டது. அதுதான் வீட்டிற்கு வரத்தாமதம்"என்றார் கருடாழ்வார்.

"உடம்பெல்லாம் என்றைக்கும் இல்லாத அளவுக்கு "ஜவ்வாது"வாசனை மணக்கிறது. இதற்கு என்ன அர்த்தம்?"என்றாள் அவர் மனைவி.

"உனக்கு என்ன ஆயிற்று? ஏன் இப்படி கேள்வி கேட்கிறாய்? அந்த வைகுண்டபதியின் பிறந்த நாள் அல்லவா இன்று? அவருக்கு வாசனை திரவியங்களை அங்கமெல்லாம் தடவி ஆனந்தப் படுத்தியவர்களில் நானும் ஒருவன். அந்த ஜவ்வாது அத்தர் என்மீதும் பட்டிருக்கிறது. அதில் என்ன ஆச்சரியப் படவேண்டியிருக்கிறது?"என்று அலட்சியமாக பதில் வந்தது கருடாழ்வாரிடமிருந்து.

"என்னிடமே பொய் சொல்கிறீர்கள். இது நியாயமா? தர்மமா? இந்திரலோகத்து அந்தபுரத்தில், யுவராணியோடு பொழுதை ஆனந்தமாகக் கழித்துவிட்டு அவள் தடவிய ஜவ்வாது வாசனையில் மெய்மறந்து போனீர்களா இல்லையா?"என்று கருடாழ்வாரின் மனைவி குற்றம் சாட்டினாள்.

இதுவரை அன்போடும் மரியாதையோடும் பெண்களுக்கே இலக்கணமாகத் திகழ்ந்த தன் மனைவி, இப்படியொரு குற்றத்தைத் தம் மீது சுமத்தியதை கண்டு கருடாழ்வார் பெரிதும் அதிர்சியடைந்தார்.

இனி என்ன சொன்னாலும் நம்பப்போவதில்லை என்று முடிவெடுத்தவர் மேற்கொண்டு பதில் சொன்னால் விபரீதமாகிவிடும் என்பதால் மௌனமாக இருந்தார். அதோடு இவள் ஏன் இப்படி மாறினாள்? இவளது மனதை கெடுத்தவர் யார் என்று தீவிரமாக யோசிக்கவும் ஆரம்பித்தார்.

"என்ன பதிலே வரவில்லை? உண்மை சுடுகிறது போலிருக்கிறது?"என்று கிண்டல் செய்த கருடாழ்வாரின் மனைவி "இனிமேல் நீங்கள் இந்திர லோகத்திற்குச் செல்லக் கூடாது"என்று உத்தரவு போட்டாள்.

"நிதானத்தோடுதான் பேசுகிறாயா?"என்றார் கருடாழ்வார்.

"ஆமாம்! தெள்ளத் தெளிவாகப் பேசுகிறேன். இனிமேல் நீங்கள் அங்கு செல்லக் கூடாது"என்றாள்.

"அப்படியென்றால் வைகுண்டவாசனின் கதி?"

"அவர் பற்றி எனக்கு கவலை இல்லை! அவர் எப்படியும் தன்னைப் பார்த்துக் கொள்வார். அவருக்கு நீங்கள் இல்லாவிட்டால் இன்னொருவர் வருவார். ஆனால் நீங்கள் இனிமேல் இந்தக் குடிலைவிட்டு அங்கு செல்லக் கூடாது"என்றாள் மறுபடியும்.

ஏதோ ஒரு விபரீதம் நடந்திருக்கிறது. இல்லையென்றால் இப்படி இவள் பேசவே மாட்டாள். அதிலும், அந்த வேங்கடவன் மீது அளவு கடந்த மரியாதையும் பக்தியும், பாசமும் கொண்டிருக்கும் இவள் இப்படிப் பேசுவது விந்தையாக இருக்கறது. யார் இப்படி ஒரு குழப்பத்தை கிளப்பி இவள் மனதை மாற்றியிருப்பார்? என்று பெரிதும் குழம்பிப் போன கருடாழ்வார் "இது பற்றி வேங்கடவனிடம் நேரிடையாகச் சென்று முறையிடுவோம். அவரது பேச்சைக் கேட்டால் தன் மனைவி சமாதானமாகி விடுவாள்"என்று முடிவெடுத்தார்.

வாசல் தாண்டி உள்ளே நுழையும் முன்பே இப்படியொரு பீடிகையைப் போட்டதால் அப்படியே வேங்கடவனை தரிசனம் செய்து விஷயத்தைச் சொல்லி வரலாம் என்று திரும்பினார்.

"எங்கே போகிறீர்கள்?"என்று சட்டென்று குறுக்கே வந்து அவரை வெளியே செல்ல முடியாதவாறு வழியை மறித்தாள்.

"நன்றாக இருந்த நீ திடீரென்று மாறிவிட்டாய். என் மனம் சரியாக இல்லை. வேங்கடனாதனைச் சந்திக்கத் திருமலைக்குச் செல்கிறேன். வழியை விடு"என்றார் கோபத்தோடு, கருடாழ்வார்.

"அங்கேயும் போகக்கூடாது, இந்த இடத்தை விட்டு அசையவும் கூடாது"என்று உறுதியாகச் சொன்னாள்.

"என்னது? பெருமாளைத் தரிசனம் செய்யப் போகக் கூடாதா? எனக்கு அதை விட வேறு கைங்கர்யம் எதுவும் இல்லை. என்னை அங்கு செல்லாமல் தடுக்கும் உரிமையும் உனக்கில்லை. இன்னும் சொல்லப்போனால் இனி நீயும் எனக்குத் தேவை இல்லை"என்று கடுமையாகப் பேசிய கருடாழ்வார் அங்கிருந்து வெளியேறினார்.

இதை தூரத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த கலிபுருஷன் "தன் திட்டம் பலித்துவிட்டது!"என்று ஆனந்தப் பட்டுக் கொண்டு, "இனி என்ன நடக்கப் போகிறது என்று பார்ப்போம்"என்று காத்திருந்தான்.

சித்தன் அருள்................ தொடரும்!

சித்தன் அருள் - கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள்!

$
0
0

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இன்று கார்த்திகை தீப திருவிழா நாள். தீப ஒளி உங்கள் உள்ளங்களில் பரவி இறைவனை உணர்த்தட்டும் என்ற அகத்தியப் பெருமானின் அருள் வாக்கினை உங்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன். எல்லா நலமும் பெற்று இனிதே வாழ்க! 
Viewing all 1936 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>